கோட்டா பொருளாதாரத்தை இல்லாதொழித்தார், ரணில் ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்கிறார் - சரித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

கோட்டா பொருளாதாரத்தை இல்லாதொழித்தார், ரணில் ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்கிறார் - சரித ஹேரத்

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயகத்தை பாதுகாக்க அரசியல் நோக்கமற்ற வகையில் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதாரத்தை இல்லாதொழித்தார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை குழு தோண்டி புதைக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்த வன்முறை சம்பவங்களை நாட்டு மக்கள் மறக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சி பொருளாதாரத்தை இல்லாதொழித்த காலகட்டமாகவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலம் நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய காலகட்டமாகவும் காணப்படுகிறது. நாடு பாரதூரமான சவால்களை தற்போது எதிர்கொண்டுள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சகல எதிர்க்கட்சிகளும் முதலில் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கினால் பாரிய விளைவுகள் ஏற்படும்.

தேசிய மக்கள் சக்தியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் மேற்கொண்ட போராட்டத்தின் மீது பொலிஸார் முன்னெடுத்த வன்முறைத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்திற்கு எதிராக தோற்றம் பெறும் செயற்பாடுகள் இறுதியில் பாரிய பேரழிவுகளை நாட்டில் ஏற்படுத்தியது, ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்தது என்பதே உண்மை.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment