டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள் மூலம் ‘ஊழல்’ எனப்படும் புற்றுநோயை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியும் என பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தை ‘GovPay’ டிஜிட்டல் கட்டணத் தளத்துடன் இணைப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நடைபெற்றதுடன் அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.govpay.lk என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இந்தச் சேவையைப் பெற வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த செயற்திட்டத்தின் அடுத்த கட்டம் நேற்று (15) உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முக்கிய செயற்திட்டமாக அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ‘GovPay’ வசதி செயற்பாடுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கிணங்க 16 பிரதான அரசாங்க நிறுவனங்களில் பொது சேவைகளை அணுகும்போது இணையவழி ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அடிப்படையாகக் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சட்ட வல்லுநர்கள், இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த புதிய செயற்திட்டத்திற்கு அமைய உயர் நீதிமன்றத்தின் பல்வேறு சேவைகளுக்கு நேரடியாக பணம் செலுத்திவந்த நிலை மாற்றப்பட்டு இனிவரும் காலங்களில் இணைய வழி ஊடாக பணம் செலுத்தும் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள்
சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள்
இழப்பீடு
முறைப்பாட்டு தாக்கல் கட்டணம்
பிரமாணப் பத்திரங்களுக்கான கட்டணங்கள்
உள்ளிட்ட பல கட்டண பரிவர்த்தனைகளை இணையவழி ஊடாக மேற்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment