கட்டாய ஜனாஸா எரிப்பு குறித்து குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் உயிரிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்த நடவடிக்கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்தவும், இனவாத நோக்கங்களை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுமாறும் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க இந்த முறைப்பாட்டை கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால், விசாரணைகளுக்காக கொழும்பு சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முறைப்பாட்டாளரான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்கவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் முதல் முஸ்லிம் மரணம் பதிவான 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை, கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாய தகனத்துக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த கட்டாய நடவடிக்கையானது, ஒரு திட்டமிட்ட சதியின் வெளிப்பாடு என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அதனை வெளிப்படுத்திக் கொள்ள இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட இந்த குற்றவியல் நடவடிக்கை கோரும் முறைப்பாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியாகும்போது சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னி ஆரச்சி, அதே காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் 2021.02.14 அன்று சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்தவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் முடிவெடுத்த தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என முடிவுக்குவர காரணமாக இருந்த நிபுணர்கள் குழுவில் இருந்தோர் (சட்ட வைத்திய ஆலோசகர் சன்ன பெரேரா, வைத்திய ஆலோசகர் ஆனந்த விஜேவிக்ரம, சட்ட வைத்திய ஆலோசகர் ரொஹான் ருவன்புர, சட்ட வைத்திய ஆலோசகர் பி.பீ. தசநாயக்க, நுண்ணுயிரியல் ஆலோசகர் ஷிரானி சந்ரசிறி, நுண்ணுயிரியல் ஆலோசகர் மாலிக கருணாரத்ன, வைத்தியர் துல்மினி குமாரசிங்க, சட்ட வைத்திய ஆலோசகர் பிரபாத் சேனசிங்க, சட்ட வைத்திய அதிகாரி சிரியந்த அமரரத்ன, பேராசிரியர் மெத்திகா விதானகே, வைத்தியர் ஹசித்த திசேரா) ஆகியோரை பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என பெயரிட்டு குற்றவியல் விசாரணை கோரியுள்ளார்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தொடர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீதான இனவாத அடக்குமுறை, அரச அங்கீகாரத்தோடு வியாபித்ததாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்கட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க, அதன் தொடர்ச்சியே கொவிட் தொற்றினால் மரணமடைந்த ஜனாஸாக்களை தகனம் செய்த நடவடிக்கை எனவும், அது முற்றுமுழுதாக முஸ்லிம்களை இலக்கு வைத்தது எனவும் சுட்டிக்கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment