நினைவேந்தல் நிகழ்வுகளை சட்டபூர்வ செயற்பாடாக அங்கீகரிக்கவும் : வலியுறுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 18, 2025

நினைவேந்தல் நிகழ்வுகளை சட்டபூர்வ செயற்பாடாக அங்கீகரிக்கவும் : வலியுறுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக, ஐசிசிபிஆர் என்ற சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் பிரிவு 3, தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளரும், ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளருமான நிஹால் சந்திரசிறி அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

வன்முறையைத் தூண்டுவதைத் தடுப்பது என்ற போர்வையில், போராட்டங்கள் உட்பட அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்போரைக் கைது செய்வது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு ஆயுத மோதலின்போது உயிரிழந்தோரை நினைவுகூரும் நினைவேந்தல்கள், தவறாக குற்றமாக்கப்பட்டுள்ளன.

அமைதியான போராட்டங்களை நடத்துவது உட்பட அமைதியான நினைவேந்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் எண் கொண்ட சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 3 தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 106(1) இன் கீழ், இதுபோன்ற நிகழ்வுகளை நிறுத்துவதற்கு பொலிஸ் தரப்பு தற்காலிக நீதிமன்ற உத்தரவுகளை கோரி வருகின்றன.

எனினும், அமைதியான முறையில் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நீதித்துறையால் இந்த விண்ணப்பங்களில் சில நிராகரிக்கப்படுகின்றன.

நினைவேந்தல் நிகழ்வுகளை, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் வடிவங்களாகக் கருத முடியாது.

இவை, இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் கீழ் பாதுகாக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டின் 34ஆம் எண் இழப்பீடு அலுவலகச் சட்டத்தின் கீழ், கூட்டு இழப்பீடு பெறுவதற்கான உரிமையை மதித்து பாதுகாக்க இலங்கை அரசுக்கு ஒரு சட்டப்பூர்வ கடமை உள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு, அமைதியான நினைவேந்தலை ஒரு சட்டப்பூர்வ மற்றும் பாதுகாக்கப்பட்ட நடவடிக்கையாக அங்கீகரித்து, இலங்கை பொலிஸின் அனைத்துப் பிரிவுகளுக்கும் மூன்று மொழிகளிலும் தெளிவான வழிகாட்டுதலை வெளியிடவேண்டும்.

இதன்மூலம், நிர்வாகப் பிரிவுகளில் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் எந்தவொரு அமைதியான நினைவேந்தல் செயல்களையும் தடுக்க நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment