(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு பொதுஜன பெரமுன தயார் இல்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய செயற்படுவோமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் கூட்டணி தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள சபைகளில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை புதன்கிழமை இடம்பெற்றது. அதில் எமது கட்சி சார்ப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ் கலந்துகொண்டு, எமது கட்சியின் நிலைப்பாட்டை அங்கு தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பொன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தது. அந்த கலந்துரையாடலில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் கூட்டணி அமைத்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கத் தேவையில்லைை என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம்.
கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எங்களுக்கு என்று ஒரு கொள்கை ஒன்று இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பது வேறு கொள்கைகளையுடை கட்சிகள். அதனால் ஆட்சியமைப்பதற்கு மாத்திரம் எங்களுக்கு மத்தியில் கூட்டணி அமைக்க தேவைப்பாடாது. அவ்வாறன நிலைக்கு தள்ளப்பட கட்சி என்ற வகையில் நாங்கள் தயார் இல்லை.
அதனால் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும்போது, அந்த உள்ளூராட்சி மன்றங்களில் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து, தீர்மானம் மேற்கொள்வோம். மாறாக கட்சியாக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க நாங்கள் இணக்கம் இல்லை என்றார்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் இடம்பெற்ற எதிர்கட்சிகளின் அரசியல் கட்சிகளின் செயலாளர்களின் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியும் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ப.திகாம்பரம், ரிஷாத் பதியுதீ்ன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment