மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சட்டங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாற வேண்டுமென, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் (14) நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்த பிரதமர், “மேல் மாகாணத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவம் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லையென்று மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதிகளவு கழிவுகள் காணப்படுகின்றன.
மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பிரச்சினை பெருநகர திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்தது. இன்னும் குப்பை முகாமைத்துவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திடீர் வெள்ளம் ஏற்பட்டால் கொழும்பு மாவட்டமே நீரில் மூழ்கும். கம்பஹா நீரில் மூழ்கும். இவ்வாறான விடயங்களை பொதுமக்கள் தரப்பிலிருந்து சிந்தியுங்கள்.
பல வருடங்களாக இருந்துவரும் ஊழியர்களை நிரந்தரமாக்கும் பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.
இது தொடர்பான முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பாக இன்னும் அறிக்கை இல்லை. கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் வரி அறவீடு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் இலங்கையின் வசதி படைத்த மாகாணமாகும். வளம்மிக்க மாகாணத்தில் வரி அறவீடு முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால் அமைச்சு என்ற வகையில் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.
தொலைதூர கிராமங்களில் தகனசாலைகள் இல்லை. அத்தகைய திட்டத்துக்கு திறைசேரி பணம் கொடுக்க முடியாதென்று கூற முடியாது. சில நகர சபைகளில் இரண்டு அல்லது மூன்று உள்ளன. அவற்றில் செயற்படுவது ஒன்றுதான். தொலைதூரப் பகுதிகளில் தகனசாலைகள் இல்லாவிட்டால் நகர்ப்புறங்களில் தகனம் செய்வதற்கான செலவு மற்றும் முறை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மாகாண சபையும் உள்ளூராட்சி நிறுவனங்களும் எம்மை ஆதரிக்கும் நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து புதிய அணுகுமுறைக்கு நாம் செல்ல வேண்டியது அவசியமாகும். அதனாலேயே மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கழிவகற்றும் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நாம் கலந்துரையாடி கவனம் செலுத்த வேண்டும்.
மாநகர சபை கட்டளைச் சட்டத்தை எடுத்துக் கொண்டால் எத்தனை விடயங்களைச் செய்ய முடியும்? ஆனால், செய்யாத விடயங்கள் எத்தனை? இவற்றை தேர்வு செய்ய அதிகாரிகள் விசேட மாநாடொன்றை நடத்த வேண்டும். இந்த சபைகளிலுள்ள பலர் இந்த கட்டளைச் சட்டத்தை வாசித்திருக்கவும் மாட்டார்கள்.
எமது பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு வசதிகளையும் திருப்தியையும் வழங்குவதற்காகவே எமது உள்ளூராட்சி மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. வரி கட்ட வேண்டுமென்று வலியுறுத்தினாலும், அவர்கள் ஏதேனுமொன்றை எதிர்பார்த்தே வரி செலுத்துகிறார்கள். இதில் சேவைகள், பாதுகாப்பு, பிள்ளைகளின் முன்னேற்றம், நல்ல சூழல் போன்ற பல விடயங்கள் உள்ளன. மாகாண சபைகள் இல்லாத நிலையில் ஆளுநரிடம் பல அதிகாரங்கள் குவிந்துள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அமைச்சு தலையிடவோ அல்லது ஆலோசனை வழங்கவோ முடியும்.
ஒன்பது மாகாண சபைகள் உள்ளன. அதிகாரிகள் என்ற வகையில், இந்த அனைத்து மாகாண சபைகளுடனும் தொடர்ந்து உரையாடல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சேவை செய்யுங்கள். எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. உதவியின் ஒருபகுதி, குறைந்த உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றே அவை வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக எம்மிடம் வேலைத்திட்டமொன்று இருக்க வேண்டும். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித் துறையில் பல்வேறு சட்ட திட்டங்கள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment