(எம்.ஆர்.எம்.வசீம்)
தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம் வங்கிகளுக்கோ பணம் வைப்பில் வைத்திருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பாக தெரிவிக்கப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் யாரும் அச்சப்படத் தேவையயில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உப தவைலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான் சிறிகொத்தவில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வியாழக்கிழமை முதல் 5 நாட்களுக்கு வங்கி கட்டமைப்புகள், பங்குச் சந்தைகள் மூடி, அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின்போது நிலையான வைப்பு வைத்திருப்பவர்களிடமிருந்து 20 வீதம் அரசாங்கத்துக்கு பெற்றுக் கொடுக்கப்போவதாக நாட்டில் வதந்தி ஒன்று பரவி வருகிறது. அவ்வாறு எதுவும் இல்லை.
அதேநேரம் கடன் மறுசீரமைப்பின்போது வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கோ நிலையான வைப்பு வைத்திருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என ஜனாதிபதி தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் சாதாரண மக்கள் வங்கிகளில் வைப்பிலிட்டிருக்கும் பணத்துக்கு அரசாங்கத்துக்கோ அல்லது வேறு யாக்குமோ கை வைக்க முடியாது. அதனால் இது அரசியல் நோக்கில் தெரிவிக்கப்படும் பொய் பிரசாரமாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் மேறகொள்ளப்போகும் ஒரு விடயம். அதனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பும் ஏற்படும் எந்த நடவடிக்கையையும் செயற்படுத்த முடியாது.
அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பின்போது வங்கி கட்டமைப்புக்கோ சாதாரண மக்களின் வங்களில் இருக்கும் பணத்துக்கோ பாதிப்பு ஏற்படப்போவதில்லை என மத்திய வங்கி ஆளுநரும் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி தெரிவித்திருப்பதை நம்ப முடியாவிட்டால், மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருப்பதையாவது நம்ப முடியும் தானே?. அதனால் இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை.
அத்துடன் கடன் மறுசீரமைப்பின் மூலம் வங்கிகளிடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன்கள் இருக்கின்றன. அது தொடர்பில் கலந்துரையாடி கடன் மீளச் செலுத்த வேண்டிய காரணத்தை நீடித்துக் கொள்வதற்கும் வட்டி வீதங்களை முடியுமான அளவில் குறைக்க முடியுமானால் அதனை மேற்கொள்வதற்குமே அரசாங்கம் கடன் மறுசீரமைப்பின் மூலம் மேற்கொள்ளப்போகிறது.
சாதாரணமாக நாங்கள் யாரிடமாவது கடன் பெற்றிருந்தால், அதனை உரிய காலத்துக்கு செலுத்த முடியாவிட்டால் அதற்கு ஒரு சிறிய நிவாரண காலம் வழங்கப்படுகிறது. அந்த நடவடிக்கையே தற்போது இடம்பெறுகிறது.
அதனால் அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம் வங்கிகளுக்கோ அல்லது வங்கிகளில் வைப்பிலிட்டிருக்கும் மக்களின் வைப்பு பணத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment