ஊடக ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் அவசியமா? ஜனநாயகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையலாம் - பேராசிரியர் சர்வேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 27, 2023

ஊடக ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் அவசியமா? ஜனநாயகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையலாம் - பேராசிரியர் சர்வேஸ்வரன்

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஊடக ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் அவசியமா? குறிப்பாக அண்மையில் கொண்டு வரப்படவிருந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் கூட ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் இருந்தன. இந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த திட்டமிடும்போது ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு அது ஜனநாயகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையலாம் என பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்கமானது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வரைபினை தயாரித்துள்ளது. இந்த வரைபு தொடர்பில் முக்கியமான மூன்று பிரச்சினைகள் உள்ளன. முதலாவது இந்த சட்டமூலத்தில் மொழியப்பட்டுள்ள ஆணைக்குழு எவ்வாறாக அமைய போகிறது? என்பதாகும். இரண்டாவது இந்த ஆணைக்குழுவுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் என்ன? என்பதும், மூன்றாவது இவ்வாறானதொரு சட்டமூலம் நாட்டுக்கு அவசியமா? என்பதாகும்.

தற்போது இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக 5 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் அமைச்சரின் செயலாளராக இருப்பதுடன், மற்றையவர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் நியமிக்கப்படுவார். அத்துடன் மூன்று உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள்.

ஜனாதிபதியால் நியமிக்கப்படக்கூடிய உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் நியமிக்கப்பட வேண்டும் என உள்ளது. இருப்பினும் அரசியலமைப்பு பேரவை என்பது கடந்த காலங்களில் பல தடவைகள் மாற்றப்பட்டு, இல்லாமல் செய்யப்பட்டு அதன் பிறகு பாராளுமன்ற குழுவென அறிமுகப்படுத்தப்பட்டது .

ஆகவே இவ்வாறானதொரு நிலைமையில் அவ்வாறு மாற்றப்படுமாகவிருந்தால் ஜனாதிபதி தான் விரும்பியவர்களை நியமிக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.

மேலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறானதொரு சட்டமூலம் அவசியமில்லை. குறிப்பாக அண்மையில் கொண்டு வரப்படவிருந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திலும்கூட ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த திட்டமிடும்போது ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு அது ஜனநாயகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையலாம் என்றார்.

No comments:

Post a Comment