பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது
தென்ஆபிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு சுமித், வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. அவுஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது. இது குறித்து விசாரணை நடத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது.
அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இந்நிலையில், வீரர்களின் ஒழுங்கீனமான செயல்பாடு, பந்தை சேதப்படுத்துதல் விவகாரம் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலனை செய்ய தொடங்கி இருக்கிறது.
பந்தின் தன்மையை மாற்றுவதை மிகப்பெரிய குற்றமாக கணக்கில் எடுத்து கொள்ள ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஐ.சி.சி.கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment