கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலை வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இன்று (08) காலை செம்மங்குப்பம் அருகேயுள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் நடந்தது. பாடசாலை வேன், ஆளில்லா கேட்டைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனம் முற்றிலும் நொறுங்கியது.
இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததோடு, 7 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் விரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
பாடசாலை வேன் ஓட்டுநர் ஆளில்லா கேட்டைக் கடக்க முயன்றபோது, ரயில் வருவதை கவனிக்காமல் அவசரமாக கடக்க முயற்சித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே துறையும், பொலிஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை வாகனங்களின் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment