இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் காலி சர்வதேச மைதானத்தில் இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் பருவத்தை ஆரம்பித்து நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கையின் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸின் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமையவுள்ளது.
இலங்கை அணிக்காக இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் 38 வயதான மத்தியூஸ் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே, அவருக்கு விடைகொடுப்பதற்காகவும் காலி மைதானம் தயார்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 2025–2027 உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்கும் இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திமுத் கருணாரத்ன ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் புதிய மாற்றங்களுடனேயே இலங்கை டெஸ்ட் அணி இந்தத் தொடரில் களமிறங்குகிறது.
இதற்காக அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இலங்கைக் குழாத்திலும் ஆறு புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக திமுத் கருணாரத்னவின் இடத்தை நிரப்பும் வகையில் ஆரம்ப வீரர் லஹிரு உதார டெஸ்ட் குழாத்துக்கு முதல் முறை அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இலங்கை துடுப்பாட்ட வரிசை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, பதும் நிசங்க, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய வீரர்களுடன் வலுவாக உள்ளது.
அதேபோன்று காலி மைதானம் சுழல் வீரர்களுக்கு அதிகம் பலம் சேர்ப்பதாக உள்ளதால் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இலங்கை டெஸ்ட் அணியின் நிரந்தர சுழல் வீரராக உள்ள கசுன் ஜயசூரியவுடன் மற்றொரு அனுபவ வீரரான அகில தனஞ்சய ஆறு ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
முதல் தர போட்டிகளில் சோபித்து வரும் சுழற்பந்து சகலதுறை வீரர் திரிந்து ரத்னாயக்கவும் அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் சுழற்பந்துக்கு அதிக அவதானம் கொடுத்து இன்றைய பதினொரு வீரர்களும் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களில், பயிற்சியின்போது உபாதைக்கு உள்ளான லஹிரு குமாரவுக்கு பதில் அழைக்கப்பட்டிருக்கும்; இசித்த விஜேசுந்தர இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு புதுமுக வீரர் ஆவார்.
இலங்கை வேகப்பந்து முகாமை அசித்த பெனாண்டோ வழிநடத்தவிருப்பதோடு அண்மையில் எசெக்ஸ் அணிக்காக ஆடி திறமையை வெளிப்படுத்திய கசுன் ராஜித்தவும் அணியில் இடம்பெற்றுள்ளது வலுச்சேர்ப்பதாகும். வேகப்பந்து சகலதுறை வீரர் மிலான் ரத்னாயக்கவும் அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை இதுவரை ஆடிய 26 டெஸ்ட் போட்டிகளில் 20 ஆட்டங்களில் வெற்றியீட்டி இருப்பதோடு ஒரே ஒரு தோல்வியை சந்திதுள்ளது. குறிப்பாக இலங்கை தனது சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்வது கடந்த நான்கு ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
எனினும் பங்களாதேஷுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சந்தித்த ஒரே ஒரு தோல்வியும் இலங்கை மண்ணிலே நிகழ்ந்தது. அது 2017 இல் கொழும்பு, பீ. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியாகும். மொத்தமாக இதுவரை சொந்த மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அணி அதில் 11 இல் வென்று 2 போட்டிகளை சமன் செய்துள்ளது.
இதற்கு அப்பால் இலங்கை அணி பங்களாதேஷுடன் ஆடும்போது தொடர்ச்சியாக சர்ச்சைகள் மற்றும் மோதல்களில் சிக்குவது வழக்கமாகி இருக்கும் நிலையில் அதனை தவிர்க்கும் வகையில் கவனமாக ஆடுவது இலங்கை அணிக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காலி டெஸ்ட் போட்டியிலும் பாதிப்புச் செலுத்த அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டிக்கான திட்டமிடலில் அதனையும் கருத்தில் கொள்வது முக்கியமானதாக உள்ளது.
No comments:
Post a Comment