நுவரெலியா இ.போ.ச டிப்போவில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ரூ. 9 இலட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு அறையிலிருந்த குறித்த நபரை சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொன்றுவிட்டு டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் போது, டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா இ.போ.ச டிப்போவில் நேற்று (05) பிற்பகல் ஓடிய பஸ்களின் வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர் எஷ்.சதீஷ்
No comments:
Post a Comment