அமெரிக்க இராணுவத்தில் உளவாளிகளை அமர்த்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அந்த இருவரும் அமெரிக்க கடற்படையில் சீனப் பாதுகாப்பு அமைச்சுக்காக உளவுத் தகவல்களை சேரித்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இச்செயற்பாடு முழுப் பலத்துடன் எதிர்கொள்ளப்படும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு FBI ஒரு போதும் இடமளிக்காது. அவர்களைக் கண்காணித்து இச்செயலைத் தடுத்துள்ளோம்.
அமெரிக்க மண்ணில் உளவு பார்த்தல் முழு பலத்துடன் முறியடிக்கப்படும். எமது தேசிய பாதுகாப்பையும் எமது இராணுவத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு எப்.பி.ஐ இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இவர்களது கைதுகள் பிரதிபலிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வெளிநாட்டு உளவுத்துறையின் சார்பாகச் செயல்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது என்றுள்ளார்.
ஓரிகானின் ஹெப்பி வெலியில் வசிக்கும் 38 வயதான சீன பிரஜையான யுவான்ஸ் சென் (Yuance Chen) மற்றும் கடந்த ஏப்ரலில் சுற்றுலா வீசாவில் ஹூஸ்டனுக்கு வந்த 39 வயதான லிரென் லாய் (Liren Lai) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(அல் ஜசீரா)
No comments:
Post a Comment