(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதான பணிப்பாளரை பொது சுகாதார பரிசோதகர் துறைக்கு நியமிப்பதால் அந்த துறைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இது தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் மேற்கொண்டுவரும் சிறந்த மாற்றங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த மாற்றங்களை செய்ய எடுத்த நடவடிக்கைக்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியவரிடம் இருந்து முறைகேடுகள் நடந்திருப்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், குறித்த நபர் மீண்டும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார பரிசோதகர் (MOH) சேவைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற முறைகேடுகளை செய்த ஒருவர் எவ்வாறு மீண்டும் நியமிக்கப்பட்டார் என்பது சிக்கலுக்குரிய விடயமாகும். இப்படிப்பட்ட மோசடிக்காரர்களை எவ்வாறு பொது சுகாதார பரிசோதகர் துறைக்கு நியமிக்க முடியும்?
MOH சேவை என்பது தாய், சேய் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஒரு துறை என்பதால் அவர்களுக்கு அநீதி இழைக்காமல் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறும், சுகாதார அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதற்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளிக்கையில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியை அந்த பதவியில் இருந்து அகற்றிய பின்னர், வேறு எந்த பதவிக்கும் நியமிக்க தீர்மானிக்கவில்லை. தற்போது அவரை சுகாதார அமைச்சுக்கு அழைத்திருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment