(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. இது கிரிக்கெட் அணியல்ல. இது ஒரு சிங்கள அணி என்ற நிலையே உள்ளது. இந்நிலைமை மாற்றப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும். எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற வியாஸ்காந்துக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவரை இலங்கை கிரிக்கெட் அணிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை கிரிக்கட் அணி தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வருவதுடன், உலகக் கிண்ண போட்டியிலிருந்து வெளியேறிய பரிதாப நிலைமையை தொடர்ந்து இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண போட்டியிலிருந்து ஏறக்குறைய தகுதி நீக்கம் செய்யப்படுகின்ற நிலைமை உள்ளது.
1996ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை கிரிக்கட் அணி இன்று பரிதாப நிலையில் இருப்பதற்கு நிர்வாகிகள், அதற்கும் அப்பால் ஊழல் விடயங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டில் அரசியல் தலையீடுகள் மேலாதிக்கம் செலுத்துகின்ற காரணத்தினால் இன்று இலங்கை கிரிக்கெட் அணி பலவீனமடைந்துள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியை ஒரு முழுமையான அணியாக நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்தியா மிகப் பெரியதொரு நாடு. பல மாநிலங்களைக் கொண்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் மத ரீதியான, இன ரீதியான, மாநில ரீதியான வேறுபாடுகள் எல்லாம் கடந்து திறமையானவர்கள் உள்வாங்கப்படுகின்றார்கள்.
உதாரணமாக தற்போது நடக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மிக திறமையாக பிரகாசித்துக் கொண்டிருப்பவர்கள் அங்கே சிறுபான்மையினமாக இருக்கின்ற ஓர் இனத்தினுடைய வீரர்களான முஹம்மத் சிராஜ், முஹம்மத் ஷமி போன்றவர்கள் அந்த நாட்டுக்காக அனைத்தையும் கடந்தவர்களாக இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இலங்கை கிரிக்கட் அணியில் சிறுபான்மை இனத்தவர்கள் ஓரங்கட்டப்படுகின்ற, புறக்கணிக்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகிறது. இங்கே ஒரு புறம் நிர்வாக குழப்பம். தெரிவுக்குழுவில் உள்ளவர்கள், கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், அரசியல்வாதிகள் இனவாத சிந்தனையில் சிந்திக்கின்றனர். இதனால் இலங்கை சிறுபான்மை இனங்களில் இருக்கின்ற திறமை வாய்ந்த வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, வடக்கிலிருந்து தேசிய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்ட வியாஸ்காந்த் எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அவருக்கு உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு உரிய இடம் வழங்கப்படுமானால் இலங்கை அணியின் வெற்றிக்கு அவரினால் பங்களிப்பு செய்ய முடியும்.
உதைப்பந்தாட்ட சம்மேளனத்தைப் பாருங்கள். பல பிரச்சினைகள் காணப்பட்டன. ஆனால் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனம் கூட இன்று அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு இனப்பாகுபாடு காட்டப்படவில்லை. ஆனால், இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இலங்கை கிரிக்கட் அணியல்ல. இது ஒரு சிங்கள அணி என்ற நிலையே உள்ளது. இது மாற்றப்பட்டு இலங்கை அணி என்றவாறு சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment