நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க எம்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார், ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா ? - அனுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 10, 2023

நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க எம்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார், ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா ? - அனுரகுமார திஸாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட கப்பம் பெறுநரான பிரசன்ன ரணதுங்க கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வாவிடமிருந்து நாங்கள் நிதி பெற்றதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். முடிந்தால் இந்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்கவை நோக்கி சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டது.

அவர் மேலும் உரையாற்றியதாவது, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்தால் கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. விவாதத்தில் நாங்கள் கலந்துகொள்ளாததை சுட்டிக்காடடி ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்ட விடயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

கிரிக்கெட் விளையாட்டு நாட்டு மக்களின் மனங்களில் உள்ளது. வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றை நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தற்போது அவ்வாறான நிலை ஏதும் கிடையாது. கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிக்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க ஆகியோர் கிரிக்கெட் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

கிரிக்கெட் சபையில் சுமதிபால குடும்பம், தர்மதாஸ குடும்பம், ரணதுங்க குடும்பம் ஆகிய குடும்பங்களின் உறுப்பினர்கள் கிரிக்கெட் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கிரிக்கெட் சபைக்கு சிறந்த ஒருவர் பதவிக்கு வரும்போது இந்த மூன்று குடும்பமும் ஒன்றிணைந்து அவரை விரட்டியடிக்கும்.

மறுபுறம் கிரிக்கெட் சபை எமக்கு நிதி வழங்கியுள்ளதாக பதிவு செய்யப்பட்ட கப்பம் பெறுபவரான ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகிறார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க எம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். சம்மியை நாங்கள் சந்தித்தவுமில்லை, பேசியதுமில்லை. ஆகவே ஆளும் தரப்பு பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க இதனை ஆதாரபூர்வமாக குறிப்பிட வேண்டும்.

பிரசன்ன ரணதுங்கவினால் இதனை பொது இடங்களில் குறிப்பிட முடியுமா, ஆனால் பிரசன்ன ரணதுங்க கப்பம் பெற்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் எங்கும் என்னால் குறிப்பிட முடியும்.

கிரிக்கெட் சபையின் ஊழல்வாதிகளை நீக்கும் பிரேணை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்தார், ஆளும் தரப்பினர் ஆதரவு வழங்கினார்கள்.

ஆகவே இந்த பிரேரணை மீது வாக்கெடுப்புக்கு கோரப்படாது என்பதை நாங்கள் அறிவோம் அதனால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை விடுத்து சம்மி சில்வாவுக்கு ஆதரவாக நாங்கள் செயற்படவில்லை.

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் புதிதாக விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெதி தலைமையிலான கோப் குழு கிரிக்கெட் சபையின் மோசடி தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்றார்.

No comments:

Post a Comment