(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பதை இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம் உறுதிப்படுத்தியுள்ளது. மகா வம்சத்துக்கு அப்பாற்பட்ட வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, உலகில் நாங்கள் நீண்ட வரலாறுகளை கொண்டமையினால் மகா வம்சம் தொடர்பில் மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றோம். அதற்கு அப்பால் சென்று கதைப்பதில்லை. ஆனால் நீண்ட வரலாறுகளை நாங்கள் கொண்டுள்ளோம்.
இராமாயணத்தில் எங்கள் வரலாறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தில் நாங்கள் எந்தளவு முன்னேற்றத்தில் இருந்துள்ளோம் என்பது இராவணனின் புஷ்பக விமானம் எடுத்துக் காட்டியுள்ளது.
இராவணனை நாங்கள் வணங்குகின்றோம். இராவணன் என்பவர் மருத்துவம், ஜோதிடம் விளையாட்டு உள்ளிட்ட 10 விடயங்களில் சிறந்தவராக இருந்த ஒரு காரணத்தினாலேயே அவரை நாங்கள் பத்து தலை கொண்டவர் என்று கூறுகின்றோம்.
இராமாயணத்தை எமது எதிரிகளின் கதை என்றே கூறலாம். எல்லா கதைகளிலும் மூன்று கதைகள் இருக்கும் நண்பர்கள் கதை, எதிரிகள் கதை, இரண்டுக்கும் நடுவில் உள்ள உண்மையான கதை என இருக்கும். இதன்படி இராமாயணம் எதிரிகளின் கதையாக உள்ளது. உண்மை கதை வேறு.
நமது வரலாற்றில் பழங்குடியில் கண்டெடுக்கப்பட்ட எமது மனித வாழ்க்கை வரலாறுகள் 44 ஆயிரம் வருடங்கள் பழமையானது. இது தொடர்பாக முறையான ஆய்வுகளை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment