இராவணன் தமிழ் மன்னனா ? சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது : வால்மீகிக்கு நன்றி கூறினார் ரோஹினி குமாரி - News View

About Us

About Us

Breaking

Friday, August 11, 2023

இராவணன் தமிழ் மன்னனா ? சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது : வால்மீகிக்கு நன்றி கூறினார் ரோஹினி குமாரி

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையை ஆண்ட சிறந்த அரசர்களில் ஒருவர் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நோக்க வேண்டும். மகா வம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணன் யுகத்தை வால்மீகியே வெளிக்கொண்டு வந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, மகா வசம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணவனின் யுகத்தை வால்மீகி இராமாயணத்தில் வெளிக்கொண்டு வந்ததையிட்டு வால்மீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராவணன் வரலாற்று கதைகளை வெறும் கற்பனை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பல விடயங்கள் உண்மைத் தன்மையாகவே காணப்படுகிறது.

இராவணன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு சிறந்த மாவட்டமாக மாத்தளையை தெரிவு செய்ய வேண்டும்.

இராவணன் புஷ்பக விமானத்தை தரித்ததை, சீதா தேவி இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மாத்தளை பகுதியில் வரலாற்று அம்சமாக இன்றும் குறிப்பிடப்படுகிறது.

இராவணன் சிறந்த அரசர் என்பதற்கு பல ஆதாரங்கள் சான்றுகள் காணப்படுகின்றன. 10 பிரதேசங்களை ஆண்டதாலும், 10 கலைகளில் தேர்ச்சிப் பெற்றதாலும் அவர் 10 தலையுடைய இராவணன் என்று போற்றப்பட்டார். இராவணன் இலங்கை மன்னன் என்ற கோணத்தில் இருந்துகொண்டு நோக்க வேண்டும்.

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையின் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பது உண்மை. ஆகவே வரலாற்றுக்களை சிறந்த முறையில் ஆய்வு செய்து அவற்றை நாட்டின் எதிர்காலத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment