(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. தேர்தலை பிற்போட வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தவிர மாற்று வழியேதும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா அல்லது அரசியல் சூழ்ச்சிகளினால் தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதியை இவ்வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அரசியலமைப்பின் பிரகாரம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
அவ்வாறாயின் பெப்ரவரி மாதம் இறுதி பகுதிக்கும், மார்ச் மாதம் முதல் பகுதிக்கும் இடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், தேர்தலை பிற்போட வேண்டுமாயின் அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இல்லை.
தவிர்க்க முடியாத காரணத்தை தவிர தேர்தலை பிற்போடும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை. ஏற்கனவே ஒரு வருடம் பிற்போட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான தேவை ஏதும் கிடையாது, தேர்தலை பிற்போட வேண்டுமாயின் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேர்தலை பிற்போட நாட்டு மக்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள். தேர்தல் ஒன்றையே மக்கள் கோரியுள்ளார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும்.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் காணப்படுகிறது.
மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் சுமைகளை தாங்கிக் கொள்ள ஒரு எல்லை உண்டு, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கினால் நாட்டில் மீண்டும் அமைதியற்ற தன்மை நிலவும் என்றார்.
No comments:
Post a Comment