நாங்கள் தவறேதும் இழைக்கவில்லை, ராஜபக்ஷ அரசாங்கத்தை மக்கள் மீண்டும் தோற்றுவிப்பார்கள் : சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 2, 2023

நாங்கள் தவறேதும் இழைக்கவில்லை, ராஜபக்ஷ அரசாங்கத்தை மக்கள் மீண்டும் தோற்றுவிப்பார்கள் : சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. மொட்டு சின்னத்தில் கூட்டணி அமைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மக்களாணைக்கு அஞ்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் நாங்கள் தவறேதும் இழைக்கவில்லை. பூகோள காரணிகள் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்பதை நாட்டு மக்கள் அறிந்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் மீண்டும் தோற்றுவிப்பார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ தீர்மானத்தை இவ்வாரத்திற்குள் அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அறிப்பை எதிர்பார்த்துள்ளோம்.தேர்தலுக்கு தயாராகவுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்னர் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டுச் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு அமைய புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment