''இந்த நாட்டிலே ஜனநாயகம் மீறி, இந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று (03) நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதற்காக ஊரடங்குச் சட்டம்? ஊரடங்குச் சட்டம் நாட்டிலே பிரகடனப்படுத்த வேண்டும் என்றால், அது மக்களை பாதுகாப்பதற்காக. ஆனால் இது மக்களை பாதுகாப்பதற்காக அல்ல. ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது
அதேபோன்று அவசரகாலச் சட்டம். எதற்காக அவசரகாலச் சட்டம்? நாட்டிலே போரா நடக்குது? போர் நடக்காமல் இன்றைக்கு அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி, ஒரு குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த நாட்டிலே வாழ்கின்ற 2 கோடிக்கு மேற்பட்ட மக்களுடைய வாழ்வை ஒரு கேள்விக்குறியாக்கியிருக்கின்றது இந்த அரசாங்கம்.
இந்த அரசாங்கம் உடனடியாக விட்டு விலக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் இந்த நாட்டை விட்டு செல்ல வேண்டும். இந்த நாட்டு மக்களை இன்று வீதிக்கு இழுத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். சுதந்திரம் கிடையாது.
இன்று தொலைபேசியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. பாடசாலை மாணவர்களுக்குகூட இன்று ஆன்லைன் வகுப்புக்களுக்கு செல்ல முடியாது. அனைத்திற்கும் இன்று முட்டுக்கட்டை போட்டிருக்கின்றார்கள்.
ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் யாப்பு மீறப்பட்டிருக்கின்றது" என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment