பாம்பு - கீரி போன்று இருந்தவர்கள் நண்பர்களாகியுள்ளார்கள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் : இனிமேல் தகுதி, போட்டிப்பரீட்சை ஊடாக மாத்திரம் அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படும் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 3, 2025

பாம்பு - கீரி போன்று இருந்தவர்கள் நண்பர்களாகியுள்ளார்கள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் : இனிமேல் தகுதி, போட்டிப்பரீட்சை ஊடாக மாத்திரம் அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படும் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடந்த காலங்களில் பாம்பு - கீரி போன்று இருந்தவர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நண்பர்களாகியுள்ளார்கள். இவர்களின் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மிகுதியாகவுள்ள உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளில் நிச்சயம் ஆட்சியமைப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம் என பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரச நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளுக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த காலங்களில் அரசியல் பரிந்துரைகளுடன் அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனால் முழு அரச நிர்வாக கட்டமைப்பும் பலவீனமடைந்தது.

தகுதி மற்றும் போட்டிப்பரீட்சை ஊடாக மாத்திரம் அரச சேவைக்கு புதிய நியமனங்கள் இனி வழங்கப்படும். 30 ஆயிரம் அரச நியமனங்களை வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளுக்கு 15 ஆயிரம் பேரை முதற்கட்டமாக இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசுவதற்கு அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை இல்லை என்று தற்போது முதலை கண்ணீர் வடிப்பவர்கள் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியை மறந்து விட்டார்கள்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இல்லாதொழித்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

கடந்த காலங்களில் பாம்பு - கீரி போன்று இருந்தவர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நண்பர்களாகியுள்ளார்கள். இவர்களின் உண்மை தன்மையை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மிகுதியாகவுள்ள உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளில் நிச்சயம் ஆட்சியமைப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment