(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் கதைத்த அரசாங்கம் இப்போது அதனை விடுத்து உள்ளூராட்சி சபைகளில் யாருடன் ஆட்சியமைப்பது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் முறையானதாக இல்லை. தரவு முகாமைத்துவம் இல்லாமையே அதற்கு காரணமாகும்.
கிளீன் ஶ்ரீலங்கா தொடர்பில் ஆரம்பத்தில் கதைத்தனர். ஆனால் இப்போது உள்ளூராட்சி சபையில் ஆட்சியமைப்பது யார் என்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. முன்னர் கூறியவற்றை மூடி மறைத்துவிட்டு இப்போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க யாருடன் இணைவது என்று தேடுகின்றனர்.
இதேவேளை பொருளாதார சீர்குலைவு தொடர்பில் கதைக்கின்றீர்கள். நீங்கள் கடந்த கால வரலாற்றில் செய்த பொருளாதார சீர்குலைவுகள் என்ன என்று நினைத்து பாருங்கள். கடந்த காலங்களில் இந்த நாட்டில் பஸ்களுக்கு தீ மூட்டியதால், மின் பிரப்பாக்கிகளை நொறுக்கியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நட்டம் ஏற்படவில்லையா என கேட்கிறோம்.
நீங்கள் தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள். அதனால் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முடியும் என நினைக்க வேண்டாம். நீங்கள் இந்த நாட்டின் நிரந்தர உரிமையாளர்கள் அல்ல. உங்களிடம் முறையான தரவுகள் இருந்தால் அவற்றை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள்.
No comments:
Post a Comment