முகக்கவசம் அணிவது தொடர்பில் அறிவித்தல் : சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 4, 2025

முகக்கவசம் அணிவது தொடர்பில் அறிவித்தல் : சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பு

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.

எனவே, மேல் மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிடப்பட்ட 2025.06.02 திகதியிடப்பட்ட கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும்போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேல் மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் COVID-19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் கொவிட்-19 தொற்றானது ஏனைய தொற்றுநோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மழைக் காலத்தில் இன்ஃப்ளூவன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கொவிட்-19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும் ஒரு பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

எனவே, இந்த நேரத்தில் கொவிட்-19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருமல், சளி (இன்புளுவன்சா போன்ற) அறிகுறிகள் உள்ளவர்கள் பணிக்கு சமூகமளிப்பதை மட்டுப்படுத்தும் தேவை இல்லை என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், ஏனையவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் அவ்வாறான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிவது போன்ற சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை மேற்கொள்வது முக்கியம் என அமைசச்சின் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முகக்கவசம் அணிவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பிழையான தகவல் குறித்து மேல் மாகாண பிரதான செயலாளர் தம்மிக விஜயசிங்க ஊடக அறிவித்லொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவித்தலில், “முகக்கவசம் அணிவது தொடர்பில் தெளிவூட்டுதல்” எனும் தலைப்பில் மேல் மாகாண பிரதான செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருவதாகவும், குறித்த கடிதம் மேல் மாகாண சபை கட்டடங்களில் செயற்படுகின்ற மேல் மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் சேவை புரியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்காக மாத்திரம் வெளியிடப்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் குறித்த கடிதம் சமூக வலைத்தளத்தில் பிழையான அர்த்தத்துடன் பரவி வருவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாடு முழுவதும் கொவிட் பரவல் அல்லது அவ்வாறான ஆபத்து காணப்படுவதாக பொதுமக்களுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ அறிவுறுத்தப்படவில்லை என்பதால், அவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தவில்லை என அவர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment