காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு உடன் போர் நிறுத்தம் மற்றும் உதவி விநியோகத்துக்கு வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உடனடியாக, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி முழுவதற்கும் தடையின்றி உதவிகள் செல்ல அனுமதிப்பதற்கும் கோரியே பாதுகாப்புச் சபையில் நேற்றுமுன்தினம் (04) இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதில் 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சபையில் 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்தபோதும் நிரந்தர அங்கத்துவம் பெற்றுள்ள அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.
‘ஹமாஸை கண்டிக்காத, ஆயுதங்களை களைந்து காசாவை விட்டு வெளியேற ஹமாஸுக்கு அழைப்பு விடுக்காத எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது’ என்று ஐ.நாவுக்கான அமெரிக்க பதில் தூதுவர் டொரோத்தி ஷீ, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு முன்னர் பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்த முயற்சியையும் சீர்குலைப்பதாக உள்ளது என்றும் வாதிட்டுள்ளார்.
அமெரிக்கா இஸ்ரேலின் மிகப்பெரிய நட்பு நாடாகவும் ஆயுத வழங்குநராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் கடந்த மார்ச் மாத ஆரம்பம் தெடக்கம் உதவிகள் செல்வதை முடக்கி, அங்கு இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையிலேயே பாதுகாப்புச் சபையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. அங்கு நேற்றும் (05) தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததோடு மேலும் பல பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர்.
காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தியது மற்றும் மனிதாபிமான உதவிகளை கடுமையாக கட்டுப்படுத்தி இருப்பது ‘நியாயப்படுத்த முடியாதது, சமமற்றது மற்றும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது’ என்று பிரிட்டனின் ஐ.நா. தூதுவர் பார்பரா வூட்வார்ட் கடுமையாக சாடினார்.
அமெரிக்காவின் வீட்டோ வாக்கை கண்டித்த ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்கு அமெரிக்கா கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பதை இது காட்டுகிறது என்று தெரிவித்தது. நிரந்தர மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் நிலைக்க முடியாது என்று குறிப்பிட்டது.
பாதுகாப்புச் சபையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிடம் ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் டானி டனோன் கூறியதாவது, ‘நீங்கள் சமாதானம் செய்தல் மற்றும் கீழ்படிவதை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை, அமைதிக்கு இட்டுச் செல்லாது. மேலும் பயங்கரத்தையே ஏற்படுத்தும்’ என்றார்.
கடந்த 2023 ஒக்டோபரில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்தே காசா போர் வெடித்தது. அது தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களில் 54,600இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் காசா எங்கும் இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதல்களில் குறைந்து 70 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 189 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த புதன்கிழமை இரவு தெற்கு காசா நகரான கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒட்டுமொத்த குடும்பம் ஒன்று உட்பட, ஆறு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள்காட்ட பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அல் மவாசி பகுதியின் ரொனி வீதியில் உள்ள வீடு ஒன்றே இலக்கு வைக்கப்பட்டிருப்பதோடு அதில் தாய், தந்தை மற்றும் அவர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவ விநியோகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இடிபாடுகளில் இருந்து அவர்களின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
அதே இடத்தில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்றுள்ள கூடாரம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டிருப்பதோடு இதில் மற்றொரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதாக வபா தெரிவித்தது.
அதேபோன்று இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்று மூன்று ஊடகவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் ‘பலஸ்தீன் டுடே’ செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றும் இஸ்மைல் பதா மற்றும் சுலைமான் ஹாஜி ஆகியோரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை காசாவில் உதவி விநியோகத்தை மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு தனியார் உதவி நிறுவனம் இரண்டாவது நாளாக நேற்றும் உதவி விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இந்த உதவி விநியோக இடங்களில் பட்டியில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து உதவி விநியோகம் வழக்கம் போல் இடம்பெறும் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காசா மனிதாபிமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் விநியோகம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.
இந்த தனியார் உதவி நிறுவனத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்ப உட்பட பிரதான மனிதாபிமான அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதோடு அதற்கு ஒத்துழைக்கவும் மறுத்து வருகின்றன.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் அங்குள்ள 2.3 மில்லியன் கொண்ட ஒட்டுமொத்த மக்களும் பஞ்ச அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்த முற்றுகையை முறியடித்து காசாவுக்கு உதவிகளை விநியோகிக்கும் வகையில் காசாவை நோக்கி படகு ஒன்று பயணித்து வருகிறது. எனினும் செயற்பாட்டாளர்களை ஏற்றிய இந்தப் படகை அனுமதிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
No comments:
Post a Comment