(எம்.மனோசித்ரா)
ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்த நிலையில், இந்த 323 கொள்கலன்கள் மாத்திரம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது? தனது விருப்பத்துக்கமைய கொள்கலன்களை விடுவிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு இல்லை. தகவல்கள் வழங்கும் எம்மை முடக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொள்கலன் விவகாரம் தொடர்பில் இரண்டாவது முறையாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எம்மால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இது தொடர்பில் புதிய விடயமொன்றைக் கூறியிருக்கின்றார். அவை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக எம்மீது குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சுங்க ஆணையாளரிடம் இது குறித்த தகவல்களைக் கோரிய போதிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 5 (1) உறுப்புரைக்கமைய அந்த தகவல்களை வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படையாகக் கூறியிருந்தால் இந்த விடயம் சமூகத்தில் இவ்வாறு பேசு பொருளாகியிருக்காது.
ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்த நிலையில், இந்த 323 கொள்கலன்கள் மாத்திரம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது?
துறைமுகத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நியமிக்கபட்ட குழு இதுவரையில் அமைச்சரவையில் எந்தவொரு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு தனது விருப்பத்துக்கமைய கொள்கலன்களை விடுவிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் பிமல் ரத்நாயக்கவுக்கு இல்லை.
துறைமுக அமைச்சருக்கு சுங்க திணைக்களத்தின் கீழுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு அதிகாரமில்லை. தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை பிமல் ரத்நாயக்க கையிலெடுத்து செயற்பட்டமையால் நாட்டுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே இவ்வாறான தீர்மானத்தை எடுத்த பிமல் ரத்நாயக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டும். தகவல்கள் வழங்கும் எம்மை முடக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் இந்நாட்டில் நியாயத்துக்காக பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் போராடுவோம் என்றார்.
No comments:
Post a Comment