வடக்கின் வைத்தியசாலைகளில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை : யாழ் போதனா வைத்தியசாலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, December 1, 2021

demo-image

வடக்கின் வைத்தியசாலைகளில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை : யாழ் போதனா வைத்தியசாலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

.com/img/a/
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்த காலத்தில் தன்னார்வ வைத்திய சேவையாளர்கள் பலர் இயங்கிய போதிலும் தற்போது வடக்கை பொறுத்த வரையில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை காணப்படுகின்றதாகவும், இதனை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளில் எமது மக்களுக்கான சுகாதார மருத்துவ சேவைகளை முன்னெடுக்கும் சுகாதார தரப்பினருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

யுத்தத்திற்கு பின்னர் பாரிய பின்னடைவுடன், மெதுவான அபிவிருத்திகளை எமது பகுதிகள் சந்தித்து வருகின்ற நிலையில் வடக்கின் சுகாதார சேவைகள் குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வடக்கின் மிகவும் முக்கியமான வைத்தியசாலையாக யாழ் போதனா வைத்தியசாலை உள்ளது. வடக்கிற்கு மட்டும் அல்ல, ஏனைய பகுதிகளுக்கும் இது முக்கியமான வைத்தியசாலையாகும். ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக வைத்தியசாலையின் பிரசவ விடுதிக்கான தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. மிக மோசமான நிலைமையில் இந்த பிரசவ விடுதி காணப்படுகின்றது. அபிவிருத்தி செய்யாது தற்காலிக ஏற்பாடுகளை மட்டுமே இதில் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் 50 வீதத்திற்கும் அதிகமாக கர்ப்பிணி தாய்மார் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

மேலும் தாதியர் பற்றாக்குறை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆலோசனை வைத்தியர்கள், மருத்துவர்கள் போன்றே தாதியர் தேவையும் அவசியமாகும். இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 657 தாதியர் தேவை இருந்தும் 573 தாதியர்களே பணியில் உள்ளனர். அவர்களிலும் 50 தாதியர்கள் எந்த நேரமும் விடுமுறையில் உள்ளனர். மேலும் 73 பேர் இடமாற்றத்தில் உள்ளனர்.

எனவே 135 புதிய மற்றும் அவசரமான தாதியர் நியமனங்கள் தேவைப்படுகின்றது. தேவைப்பாடு அடிப்படையில் பார்த்தாலும் கூட ஆயிரத்து 200 தாதியர்கள் தேவைப்படும், ஆனால் குறைந்தபட்சம் 300 தாதியர்களையேனும் அதிகரிக்க வேண்டும்.

வைத்தியர்களை பொறுத்தவரை 175 வைத்திய ஆலோசகர்களே உள்ளனர். ஆனால் 300 பேருக்கான வெற்றிடம் உள்ளது. எனவே இதனை கருத்தில் கொள்ள வேண்டும். யாழ் போதனா வைத்தியசாலையை பொறுத்த வரையில் வடக்கு கிழக்கிற்கான முக்கியமான வைத்தியசாலையாகும்.

யுத்த காலத்தில் தன்னார்வ வைத்திய சேவையாளர்கள் பலர் இருந்த போதிலும் தற்போது வடக்கை பொறுத்த வரையில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. எனவே இதில் இனியும் காலதாமதம் இல்லாது நியமனங்களை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கை பொறுத்தவரை 117 வைத்தியசாலைகள் வட மாகாணத்தின் கீழ் உள்ள போதிலும், இவற்றில் 15 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. அதேபோல் 41 வைத்தியசாலைகளில் மட்டுமே தாதிய அதிகாரிகள் உள்ளனர். ஏனைய பல குறைபாடுகள் உள்ளன.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில், முக்கியமான சில வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல வேண்டும் என வைத்தியர்கள் மற்றும் மக்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் மத்திய அரசின் கீழ் வைத்தியசாலைகள் இயங்கும் நேரத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதுடன் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதே அதற்கான காரணமாகும்.

மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளை கைவிட்டு மத்திய அரசின் கீழ் இயங்குவதை வைத்தியசாலைகள் கவனத்தில் கொள்வது நியாயமான செயற்பாடாக நாம் கருதவில்லை.

அதேபோல் யாழ் போதனா வைத்தியசாலை மாகாண அதிகாரத்தின் கீழ் இயங்கினாலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சேவைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *