ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 22 சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனை பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.
இந்நடவடிக்கையை பலஸ்தீன அதிகாரிகளும் உரிமைகள் குழுக்களும் கண்டித்துள்ளன.
இதேவேளை காசாவில் இஸ்ரேல் நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக உணவுத் திட்டத்தின் களஞ்சியசாலை சூறையாடப்பட்டு ஒரு நாள் கடந்த பின்னர் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காசாவின் சிவில் பாதுகாப்பு அதிகாரி முகமது அல்-முகையர் கூறுகையில், ‘இஸ்ரேலிய தாக்குதல்களில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அல்-புரைஜில் உள்ள வீடொன்றின் மீதான தாக்குதலில் 23 பேர் அடங்குவர்.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் அல்-புரைஜில் மற்றும் மனிதாபிமான உதவி மையத்திற்கு அருகில் நடந்ததாகக் கூறப்படும் இறப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
இதேவேளை தெற்கு காசா பகுதியில் உள்ள மொராக் அச்சில் உள்ள அமெரிக்க உதவி மையத்திற்கு அருகில் நேற்று காலை இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்’ என்று கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான முற்றுகைக்குப் பிறகு காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. ஆனாலும் அங்கு உணவு நெருக்கடி தீவிரநிலையில் காணப்படுவதோடு மனிதாபிமான நிலைமையும் மோசமடைந்துள்ளது. ஐந்து பேரில் ஒருவர் பட்டினிக்கு உள்ளாகியுள்ளதாக உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான மன்றம் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது.
ஹமாஸிடம் மனிதாபிமான உதவிப் பொருட்கள் செல்வதைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேலின் யோசனைக்கு அமைய இந்த மன்றம் இப்பணியில் ஈடுபட்டுள்ளது. இம்மன்றத்தின் பணிகளை ஜக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் விமர்சித்துள்ளன.
No comments:
Post a Comment