(எம்.ஆர்.எம்.வசீம்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு உள்நாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த தீர்மானத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோமென ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழத்தின் வைத்திய துறைக்கு உள்நாட்டு மாணவர்களை இணைத்துக் காெள்வதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில், அரசாங்கம் இந்த தீர்மானத்தை விசேட குழுவொன்றின் தீர்மானத்துக்கு அமையவா அல்லது கல்வி அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமையவா? அல்லது எந்த அடிப்படையில் எடுத்தது என கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கேட்கிறேன்.
ஏனெனில் உள்நாட்டு மாணவர்கள் அனைவருக்கும் அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாது. அரச பல்கலைக்கழகங்களுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு தொகையினரே இணைத்துக் கொள்ளப்படுவதால், தகுதியுள்ள மாணவர்கள் பலர் பணம் செலுத்தி, இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து அவர்களின் வைத்தியர் கனவை நனவாக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், உள்நாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ள தடை விதிப்பதால், அங்கு கல்விக்கான சுதந்திரம் மறுக்கப்படுவதுடன் அந்த மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வியை தொடர்வதால், எமது அன்னிய செலாவணி பாரியளவில் வெளிநாடுகளுக்கு செல்கின்றன.
கல்வி அமைச்சர் ஹரினியும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அதனால் அவர் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக தெரிவித்து வந்த இந்த அரசாங்கம் தற்போது கல்வி கற்கும் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கி இருக்கிறது.
அதேநேரம் எமது நாட்டில் அதிகமாக சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. அதில் கல்வி கற்கும் மாணவர்கள் உயர் கல்வியை கற்பதற்கு எமது நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்காக ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமே எமது அன்னிய செலாவணி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுத்துக் கொள்ள முடியுமாகிறது.
அவ்வாறு இல்லாமல் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் உள்நாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வில்லை என்றால் அந்த மாணவர்களின் நிலை என்னவாகும். இது தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து செயற்பட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாங்கள் ஆரம்பித்த சுரக்ஷா காப்புறுதி திட்டம் அரச பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் வழங்கவில்லை. சர்வதேச பாடசாலை மணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்தோம். ஏனெனில் அந்த பாடசாலைகளில் கல்வி கற்பதும் எமது நாட்டு மாணவர்களாகும். இவ்வாறு திறந்த மனதுடனே எமது அரசாங்கம் செயற்பட்டது.
அதனால் அரசாங்கம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய துறைக்கு உள்நாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு எடுத்த தீர்மானத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி மாற்று தீர்மானங்களை மேற்கொள்வோம் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment