(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை. ஏனெனில் ஆட்சியமைப்பது தொடர்பில் சிறந்த கொள்கைத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுமார் 700 ஆசனங்கள் வரை கைப்பற்றியுள்ளது. எமது கட்சியின் பெயர் பட்டியல் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். முரண்பாடற்ற வகையில் உறுப்பினர் தெரிவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாநக சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். இருப்பினும் அதற்கான முறையான பேச்சுவார்த்தைகளில் ஏதும் ஈடுபடவில்லை. அத்துடன் ஆட்சியமைப்பது தொடர்பில் முறையான திட்டத்தையும் முன்வைக்கவில்லை.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. அரசாங்கத்துக்கு எதிராக எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்.
அரசியல் பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்டு தற்போது கைதுகள் இடம்பெறுகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மறக்கடிக்கும் வகையில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றார்.
No comments:
Post a Comment