அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமையால் முஸ்லிம் சமூகம் அதிருப்தியோடு இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை அரசாங்கம் பொருத்தமான அணுகுமுறை ஊடாக கையாள வேண்டும் என தேசிய ஷூரா சபை ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்துள்ளது.
ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஷூரா சபை (NSC) யின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பில் சந்தித்து பல்வேறு தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விடயங்கள் குறித்து கலந்துரையாடியது. இதன்போதே மேற்குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ் (கொழும்பு), தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் (கம்பஹா), பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மது அஸ்லம் (குருணாகல்), முஹம்மட் பஸ்மின் (கண்டி), முஹம்மது பைசல் (புத்தளம்), ரியாஸ் பாருக் (கண்டி) மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா (தேசியப் பட்டியல்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய ஷுரா சபையின் சார்பில் அதன் தேசியத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர், முன்னாள் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், உப தலைவர்களான டாக்டர் மரீனா ரிபாய், சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், பேராசிரியர் எஸ்.எம்.ஷிபா, விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹகீம் அபூபக்கர், உப செயலாளர் பர்சான் ராசிக், பொருளாளர் அனஸ் அஸீஸ், உப பொருளாளர் என்.எம்.நுஹ்மான், மற்றும் முன்னாள் உபதலைவர் எம்.எச்.எம். ஹஸன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது, ஷூரா சபையின் செயற்பாடுகள் மற்றும் நோக்கங்கள் பற்றி அதன் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் எடுத்துரைத்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் சபையின் குழுவினர் முன்வைத்தனர். இந்த சந்திப்பில் மனித உரிமைகள், யாப்புத் திருத்தங்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான தேசிய விடயங்கள் ஆராயப்பட்டன.
நாட்டுடன் தொடர்பான அதிமுக்கிய தீர்மானங்களை எடுக்கும் மன்றமாகிய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதானது முஸ்லிம் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறியிருப்பது பற்றியும் முஸ்லிம் சமூகம் அது தொடர்பாக அதிருப்தியோடு இருப்பது பற்றியும் இந்த விவகாரத்தை உரிய முறையில் கையாளுவதற்கு அரசு பொருத்தமான அணுகு முறையை கையாள வேண்டும் என்றும் ஷூரா சபையின் குழு தெரிவித்தது.
மேலும், தேசிய ஒற்றுமை, தேசத்தின் இறையாண்மை என்பன தொடர்பாக முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்த சந்திப்பில் ஷூரா உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.
பிரிவினைவாத, தீவிரவாத இயக்கங்களை முஸ்லிம் சமூகம் எப்போதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால், முஸ்லிம்கள் அடிக்கடி இனவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டதுடன் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் இடம்பெயர்வு மற்றும் போரின் போது ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்பதையும் குழுவினர் வலியுறுத்தினர்.
அரசாங்கத்துடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கும், தேசிய ஒற்றுமை, நீதியின் ஆட்சி என்பவற்றின் முன்னேற்றத்திற்காக உறுதியாக செயல்படுவதற்கும் தேசிய ஷூரா சபை தயாராக இருக்கிறது என்றும் குழு தெரிவித்தது.
இலங்கை தேசம் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு இஸ்லாமிய நாடுகளது முதலீட்டு முயற்சிகள் மென்மேலும் அதிகரிக்கப்படுவதற்கான முன்மொழிவை அரசாங்கத்திற்கு தேசிய ஷூரா சபை ஏற்கனவே முன்வைத்திருப்பதை நினைவூட்டிய குழுவினர் தேசத்தின் நலனில் ஷூரா சபைக்கு இருக்கும் அக்கறையை இதன் ஊடாக வெளிப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை ஷூரா சபையின் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம் சமூகத்துடனும் நாட்டின் அபிவிருத்தியுடனும் தொடர்பான 27 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்து கலந்துரையாடல் நடாத்திய சந்தர்ப்பத்தை பிரதிநிதிகள் நினைவூட்டினர்.
பாராளுமன்ற அமர்வுகளின்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைகளை நிகழ்த்தவும் கலந்துரையாடல்களைச் செய்யவும் முஸ்லிம் சமூகம் தொடர்பான தேவையான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் தயாரித்து தருவதற்கான தயார் நிலையில் தேசிய ஷூரா சபை இருப்பதனையும் தேவைப்படின் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஷூரா சபையை அணுக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது.
முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் முக்கிய விடயங்களை அரசாங்கத்தின் பிரதிநிதிகளது கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment