சட்டபூர்வமான வலிதாரர்கள் இன்றி நடைபெறுகின்ற திருமணங்கள் செல்லுபடியற்றதாகிவிடும் என காதி நீதிபதிகள் சபை தீர்ப்பளித்துள்ளது.
பாணந்துறை காதி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை ஆட்சேபித்து அளிக்கப்பட்ட மேன்முறையீடு குறித்ததான விசாரணைகளையடுத்தே கடந்த வாரம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறையைச் சேர்ந்த விண்ணப்பதாரரான மணப் பெண் ஒருவர் காதி நீதிமன்றுக்கு தனது தந்தை தனது திருமணத்தை தடுப்பதாக முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தார்.
1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரிவு 47 இன் கீழ் செய்யப்பட்ட இம்முறைப்பாட்டினை விசாரித்த பாணந்துறை காதி நீதிபதி “குறித்த திருமணத்திற்கு குறித்த மணமகளின் தந்தை வலிதாரராக இருக்க வேண்டிய அவசியமில்லை” என 03.01.2023 அன்று தீர்ப்பொன்றை வழங்கியிருந்தார்.
காதி நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பிரதிவாதியாகிய தந்தை காதிகள் சபைக்கு மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இம்மேன்முறையீட்டு மனு காதிகள் சபையின் தவிசாளர் என்.எம்.எம். பிஷ்ருல் அமீன் மற்றும் ஏனைய உறுப்பினர்களான எம்.எல்.எம்.எச்.மொஹிடீன் ஹுசைன் மற்றும் எம்.ரபீக் இஸ்மாயில் முன்னிலையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாய்மொழி வாதங்களையும் எழுத்து மூல சமர்ப்பணங்களையும் சீர்தூக்கிப் பார்த்து காதிகள் சபை கடந்த 24.05.2025 அன்று மேற்குறித்த தீர்ப்பினை வழங்கியது.
குறித்த தீர்ப்பில் பின்வரும் விடயங்களையும் காதிகள் சபை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
“முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் ஷாபி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் திருமணம் ஒன்றின் வலிதாந்தன்மைக்கு சட்டபூர்வ வலிதாரர் ஒருவர் அவசியமாகும். குறித்த விடயம் தொடர்பில் விண்ணப்பம் செய்யப்பட்ட அதே தினத்தில் குறித்த மணமகனின் மைத்துனரை மணமகளின் வலிதாரராக நியமித்து, வலி அனுமதிப்பத்திரத்தை குறித்த காதி நீதிபதி வழங்கியிருப்பது சட்டத்துக்கு முரணானதாகும்” .
“சட்டத்தின் நான்காவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க, பிரிவு 47 இன் கீழ் கற்றறிந்த காதி நீதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக அதிகார வரம்பை (Exclusive Jurisdiction) அவர் முறையாகப் பயன்படுத்தவில்லை எனும் விடயம் காதி நீதிமன்றப் பதிவேடுகளிருந்து தெளிவாக எம்மால் அவதானிக்க முடிகின்றது ”
மேலும், சட்டத்தின் பிரிவு 25 (1) (அ) மற்றும் (2) இன் தெளிவான கட்டாயத் தேவையை கற்றறிந்த காதி நீதிபதி ஒருவர் எவ்வாறு கடந்து செல்ல முடியும்? என காதிகள் சபை கேள்வியெழுப்பியுள்ளது.
இச் சூழ்நிலையில், 03.01.2023 திகதியிடப்பட்ட பாணந்துறை காதி நீதிபதியின் உத்தரவையும் 05.01.2023 திகதியிடப்பட்ட வலி அனுமதிப்பத்திரத்தினையும் (Wali Authorization Certificate) மற்றும் குறித்த திருமணச் சான்றிதழையும் இரத்துச் செய்துள்ளது. மேலும் குறித்த திருமணம் வெற்றும் வறிதானதுமென (Null and Void) பிரகடனப்படுத்தி காதிகள் சபை இவ் வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த வழக்கின் மேன்முறையீட்டாளரான தந்தையின் சார்பில் சட்டத்தரணி றஷாட் அஹமடின் அறிவுறுத்தலுக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணி றுடானி ஸாஹிர் மன்றில் தோன்றி வாதங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment