நாட்டில் 500 சிக்குன்குனியா நோயாளர்கள் : 23 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 30, 2025

நாட்டில் 500 சிக்குன்குனியா நோயாளர்கள் : 23 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்களும், 500 சிக்குன்குனியா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அனுஜா வீரசிங்க தெரிவித்தார்.

டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவல் தொடர்பில் வெள்ளிக்கிழமை (30) இலங்கை மருத்துவ சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல பகுதிகளிலும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை நாடளாவிய ரீதியில் 23,300 க்கும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 45 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்து இரத்தினபுரி, காலி, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த வாரம் மாத்திரம் 1678 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். டெங்கு மற்றும் சிக்கன்குனியா என்பன வைரஸால் பரவுகின்ற நோயாகும். இவை இரண்டும் நோயும் நுளம்புகளால் பரவுகிறது.

நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட சிக்குன்குனியா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சையினை பெற்று செல்லும் நோயாளர்கள் தொடர்பில் எவ்வித தரவுகளும் இல்லை. ஆகையால் சமூகத்தில் நோயால் பாதிப்புக்குள்ளாகிய பலர் உள்ளனர். மழையுடன் கூடிய காலநிலையோடு நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதாக குடம்பியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவப் பெயர்ச்சியை தொடர்ந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. மே 19 முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட நுளம்பு ஒழிப்பு வாரத்தின்போது சுமார் 1 இலட்சத்தி 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக நுளம்பு பெருக்கத்தை கட்டுபபடுத்துவதற்காக இம்மாதமும் டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

இதேவேளை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா குறிப்பிடுகையில், கடுமையான மூட்டு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்குன்குன்னியாவிடமிருந்து பச்சிளம் குழந்தைகளையும் வயோதிபர்களையும் பாதுகாப்பது அவசியம்.

பிரசவ காலம் நெறுங்கியுள்ள தாய்மார்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். நோய் தொற்றுக்கு ஆளாகும் பட்சத்தில், குழந்தை பிறந்து ஒரு வார காலப்பகுதியில் சிக்குன்குனியா ஏற்படலாம். இதனால் குழந்தையின் இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

ஆகையால் தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் நிலவும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியம் என்றார்.

டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய இரண்டு நோய்களும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிக்கலான நிலைமைகளும் உருவாகலாம். ஆகையால் நுளம்பு தாக்கத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெறுவது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment