வெற்றிடமாகவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அந்த தீர்மானத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளீமே எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் விடுத்த சவாலை எந்தவொரு பிரதேசமும் வெற்றி கொள்ளாமையினால் தேசியப் பட்டியல் விவகாரம் எமக்கு எந்தவிதத்திலும் சவாலாக அமையவில்லை, மாறாக ஒரு வரமாக அமைந்துள்ளது எனவும் மு.கா. செயலாளர் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு தேசியப்பட்டியலை பெற்றுக்கொண்டது. இதற்கு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பதவி வெற்றிடமாக உள்ளது.
இதனிடையே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பதவியை உள்ளூராட்சி மன்றங்களை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிகொள்ளும் பிரதேசங்களுக்கு வழங்க இருப்பதாக அக்கட்சி அறிவித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் வினவியதையடுத்தே, அவ்வெற்றிடத்தை நிரப்புவது முன்னாள் எம்.பி. நளீமின் தீர்மானத்தில் இருப்பதாக மு.கா. செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், நாம் விடுத்த சவாலை காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களே வெற்றிகொண்டன. காத்தான்குடிக்கு ஏற்கனவே ஹிஸ்புல்லாஹ் இருக்கிறார். அட்டாளைச்சேனைக்கு உதுமான் லெப்பை இருக்கிறார். எனவே, அப் பிரதேசங்களுக்கு தேசியப் பட்டியல் வழங்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. எனவே, ஏறாவூருக்கு நாம் சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
இது தவிர எமது சவாலை வேறு எந்த ஊரும் வெற்றிகொள்ளாததால் எமக்கு தேசியப்பட்டியல் விவகாரம் சவாலாக அமையவில்லை. அது வரமாக அமைந்துள்ளது. இந் நிலையில் மீண்டும் நளீம் அந்த பதவியில் தொடர முடியும். அவர் விரும்பினால் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினாக பதவி வகிக்கலாம் என்றார்.
இந்நிலையில் இது விடயமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான நளீமிடம் வினவியபோது, நான் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக மக்கள் பணிகளை தொடரவே எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு வழங்குவதில் முனைப்பு காட்டுவதாக இல்லை. எனவே, நிதி ஒதுக்கீடு இல்லாமல் எமது பிரதேசத்திற்கு அபிவிருத்தியை செய்வதையும் மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம். இதனால், நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதை விட நகர சபையின் தவிசாளராகுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
எமக்கு ஏறாவூர் நகர சபையை அமைப்பதற்கு இன்னும் இரண்டு ஆசனங்கள் தேவைப்படுகின்றது. சகல கட்சிகளினது ஒத்துழைப்பையும் நாம் கோரியிருக்கிறோம். பல கட்சிகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளன என்றார்.
இந்நிலையில் இது விடயமாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரிடம் மீண்டும் வினவியதற்கு, தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை கையப்படுத்தும் பணிகளில் நாம் மும்முரமாக இருக்கிறோம். இந்த வேலைகள் அடுத்த வாரமளவில் நிறைவடைந்து விடும். அதற்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் இதுபற்றி கலந்துரையாடி தீர்மானமொன்று வரும் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment