உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் மிக முக்கிய சாட்சியங்கள் சில பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் நெருங்கியவராக இருந்த அசாத் மெளலானாவின் பேட்டியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்போதும் பல வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னரும், அதன் பின்னரும் தற்போது மர்மமாக உள்ள சாரா எனும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பிலும் புதிய விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்தும் முக்கிய தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2018 நவம்பர் மாதம் மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரு பொலிஸாரை கொலை செய்து அவர்களின் ஆயுதங்களை சஹ்ரான் கும்பல் கொள்ளையிட்டமை 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் விசாரணையில் வெளிப்பட்டது. எனினும் அதுவரை அக்கொலைகள் விடுதலைப் புலி ஆதரவாளர்களால் செய்யப்பட்டதாகவே காண்பிக்கப்பட்டது. அவ்வாறு காண்பிப்பதற்காக போலியான சான்றுகளை உருவாக்க அரச உளவுச் சேவை மற்றும் இராணுவ உளவுப் பிரிவு ஆகியவை முன்னின்று செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இராணுவ உளவுப் பிரிவு அப்போது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகளை திசை திருப்ப வழங்கிய உளவு அறிக்கைகள் இது தொடர்பிலான சந்தேகத்தை உருவாக்கியிருந்தது.
அதன்படி இடம்பெறும் புதிய விசாரணைகளில் தற்போது, குறித்த பொலிஸாரின் கொலையை திசை திருப்ப ஜக்கட் ஒன்று அடங்கிய பாடசாலை பையை சம்பவ இடத்துக்கு அருகே மறைத்து வைத்து நாடகமாடியமை தொடர்பிலான விடயத்துக்காக அரச உளவுச் சேவையின் மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்டோர், குறித்த ஜக்கட் மீட்கப்பட முன்னைய நாள், அப்போதும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு தேடுதல் எனும் பெயரில் சென்று அதனை எடுத்திருப்பதாக நம்பப்படுகின்றது. பின்னர் அது வவுணதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் சி.ஐ.டி.அதிகாரிகளுக்கும் அரச உளவுச் சேவையினாலேயே தகவலும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி வருகின்றது.
இதில் பிள்ளையான் உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சில முக்கியமான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி. தகவல்கள் வெளிப்படுத்தின.
Vidivelli
No comments:
Post a Comment