கூட்டணியின் கொள்கைக்கு இணங்க செயற்பட முடியாவிடின் சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம் - பொதுஜன பெரமுன - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, November 30, 2021

demo-image

கூட்டணியின் கொள்கைக்கு இணங்க செயற்பட முடியாவிடின் சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம் - பொதுஜன பெரமுன

.com/img/a/
(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை ஐக்கிய தேசிய கட்சியிடம் விட்டுக் கொடுத்து கட்சியை காட்டிக் கொடுத்தவர்கள் தற்போது பொதுஜன பெரமுனவை வீழ்த்தி மக்களாணையை பெற முயற்சிக்கிறார்கள். கூட்டணியின் கொள்கைக்கு இணங்க செயற்பட முடியாவிடின் சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து தாராளமாக வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் உட்பட சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள்.சுதந்திர கட்சியினரது செயற்பாடுகள் 'களங்கிய குட்டையில் மீன் பிடிப்பதை' போல் உள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தற்போது மாற்றிக் கொள்ளவில்லை.சேதனப்பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. பல்வேறு காரணிகளினால் சேதனப்பசளை திட்டம் பல கட்டத்தில் சிக்கல் நிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேதனப்பசளை திட்டத்தினால் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தின் கொள்கைக்கு முரனாக கருத்துரைப்பதை அவதானிக்க முடிகிறது.

சேதனப்பசளை திட்டம் வெற்றி பெற்றிருந்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன' எனது ஆட்சி காலத்தில்தான் சேதனப்பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு நான் பொறுப்பு' என தன்னிச்சையாக முன்வந்து பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்.

சேதனப்பசளை திட்டத்தினால் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக தற்போது அவரும், அவரது தரப்பினர்களும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறான செயற்பாடு கூட்டணி அரசாங்கத்திற்கு பொருத்தமற்றது.

கூட்டணியின் கொள்கைக்கு அமைய செயற்பட முடியாவிடின் சுதந்திர கட்சி மாத்திரமல்ல ஏனைய பங்காளி கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டு அரச வரபிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு இருப்பது எந்தளவிற்கு நியாயமானதாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளை 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியிடம் விட்டுக் கொடுத்து கட்சியை காட்டிக் கொடுத்தவர்கள்தான் இன்றும் அக்கட்சியை நிர்வகிக்கிறார்கள். சுதந்திர கட்சியின் கொள்கை மாற்றமடைந்ததை தொடர்ந்தே அக்கட்சியின் உறுப்பினர்கள் 2016ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார்கள்.

சுதந்திர கட்சியின் கொள்கையை காட்டிக் கொடுத்தவர்களுக்கு மக்கள் ஜனநாயக முறையில் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்கள். மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் தற்போது பொதுஜன பெரமுனவை வீழ்த்தி அதனூடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அவ்வாறான செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *