ஆடு, மாடுகள் முன்னிலையில் உரையாற்றிய சீமான் - News View

About Us

About Us

Breaking

Friday, July 11, 2025

ஆடு, மாடுகள் முன்னிலையில் உரையாற்றிய சீமான்

தேனி வனப் பகுதியில் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என மதுரை ஆடு, மாடுகள் மாநாட்டில் சீமான் பேசினார்.

மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற பெயரில் ஆடு - மாடுகளின் மாநாடு நேற்று (10) நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “ஆடு, மாடுகள் எங்களின் செல்வங்கள். எங்கள் வாழ்க்கை, கலாசாரத்துடன் இணைந்து வாழும் உயிரினங்கள். ஒவ்வொருவர் வீடுகளிலும் உறவினர் போல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். கால்நடைகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. 

காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த ஆடு, மாடுகள் தற்போது அதே காட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை உடைக்க வேண்டும்.

மாட்டுக்கறி வர்த்தகம் ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பால் வர்த்தகம் மூலம் ரூ.13.5 இலட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 இலட்சம் கோடி. இந்த பால் சந்தை மதிப்பை கூட்டுவதற்கு பதில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுத்து வருகின்றனர். 

கால்நடைத்துறை கால்நடைகளை பற்றி கவலைப்படாத துறையாக உள்ளது. பால் வளத்துறை மாடுகளே இல்லாமல் மாட்டுப்பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் ரூ.1.7 கோடி ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும், தமிழகத்தில் 12 இலட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த மேய்ச்சல் நிலங்களை விமான நிலையம், பேருந்து நிலையம் கட்டுவதற்காக அபகரிக்கின்றனர். காட்டுக்குள் மேய விடுவதில்லை. சமவெளியிலும் மேயவிடுவதில்லை. 

மாடுகள் மேய்ந்தால் காட்டில் ஆறு, அருவி உருவாகாது என்கின்றனர். நொய்யல் ஆறு, வைகை ஆறு நிலை எப்படி இருக்கிறது. இந்த ஆறுகள் சாக்கடைகளாக மாறியுள்ளன. 32 ஆறுகள் மண் அள்ளப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளது. 

வன விலங்குகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதிப்பதாக கூறுபவர்கள் மலைகளை குவாரிக்காக வெடி பொருட்களை கொண்டு வெடிக்க வைக்கும்போது பாதிக்காதா? மாடுகள் மேய்ந்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும் என்பது பைத்தியக்காரத்தனமானது.

ஆடு, மாடுகள் மேய்ப்பது அவமானம் அல்ல. அது ஒரு வருமானம். இதை உணராத வரை பொருளாதார வளர்ச்சி வராது. பகவான் கிருஷ்ணன், நபிகள் நாயகம், ஏசுபிரான் மாடு மேய்த்துள்ளனர். 

ஆடு, மாடு மேய்ப்பது தொழில் அல்ல எங்களின் பண்பாடு, வாழ்வியலுடன் இணைந்த கலாசாரம். இதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத உயிர்கள் ஆடு, மாடுகள். நாட்டு மாட்டினத்தை அழிக்க பார்க்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்கள். அதை மீட்டெடுத்தோம். ஆடு, மாடுகளை அற்ப உயிர்கள் என நினைக்கக்கூடாது.

நாட்டில் மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். தேனி வனப்பகுதிக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விவசாயி சன்னாசி வனத்துறையால் தாக்கப்பட்டார். அதே இடத்தில் ஓக. 3இல் பல ஆயிரம் மாடுகளை காட்டிற்குள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்டும் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு சீமான் பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006 மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.

கிடை ஆடு, கிடை மாடுகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை ஆவணப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கிடை ஆடு, கிடை மாடு, எருமை, வாத்து மேய்ப்போருக்காகத் தனியாக, தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும்.

நாட்டின ஆடு, மாடுகளை பாதுகாக்க அதனை வளர்க்கும் மக்களுக்குத் தனியாகச் சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்
கால்நடைகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் மக்களின் உரிமைக்கும் உடைமைப் பாதுகாப்பிற்கும் வலசைச் செல்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

இடி, மின்னல், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்படும் மேய்ச்சல் சமூக மக்கள மற்றும் அவர்களின் கால்நடைகளுக்குத் தனியாகக் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

சிப்காட் போன்ற திட்டங்களுக்கு மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டு இயற்கையான மேய்ச்சல் காடுகள் அழிக்கப்பட்டு 75,000 ஹெக்டேருக்கு அதிகமான வன நிலங்கள் தைல மரம் உள்ளிட்ட வணிக மரங்கள் நடப்பட்டதை மாற்றி மீண்டும் இயற்கை காடுகளை உருவாக்க வேண்டும்.

கிடா முட்டு, சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு போன்ற கால்நடை சார்ந்த பாரம்பரிய விளையாட்டுகளை தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும்.

கால்நடை துறை மருந்தகங்களில் தமிழ் கால்நடை மருத்துவம் மற்றும் மருந்துகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அழிந்துவரும் எருமை வளர்ப்பை மீட்டெடுக்க எருமை பாலுக்கு சிறப்பு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேய்ச்சல் வலசை வழித்தடங்களில் உள்ள நெடுஞ்சாலை, தொடர்வண்டி பாதைகளில் மேய்ச்சலுக்காக சுரங்க பாதைகளை உருவாக்கிட வேண்டும்.

மேய்ச்சல் சமூக மக்களுக்கு அரச தனியாக அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

கால்நடைதுறையில் மேய்ச்சல் கால்நடைகளுக்கு என தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆடு, மாடுகள் மாநாட்டில் மேடை முன்பு கொட்டடி அமைக்கப்பட்டு கிடை மாடுகள் தனியாகவும், கிடை ஆடுகள் தனியாகவும் அடைக்கப்பட்டிருந்தது. மேடை அருகே ஏராளமான ஆட்டுக் கிடாக்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. 

கிடை ஆடு, மாடு கொட்டடிக்கு பின்னால் கட்சியினர் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாடு தொடங்கி முடியும் வரை ஆடு, மாடுகள் பிரச்சினை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆடு, மாடுகளுக்கு 3 நாள் பயிற்சி அளித்து நிற்க வைத்திருப்பதாக” சீமான் பேசும்போது குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு காளைக்கு சீமான் மரியாதை செய்யும் போது காளை திமிறியது. அதிக வெளிச்சம் இருந்தால் ஆடு, மாடுகள் மிரண்டு ஓடிவிடும் என்பதால் மாநாட்டில் விளக்கு வெளிச்சம் அதிகம் இல்லை. பட்டாசுகளும் வெடிக்கப்படவில்லை. மாநாட்டில் சீமான் மட்டுமே பேசினார். ஆடு, மாடுகள் மனிதர்களுக்கு கோரிக்கை வைப்பது போல் சீமான் பேசினார். பேச்சில் திமுக, பாஜகவை விமர்சித்தார்.

No comments:

Post a Comment