காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் 13.11.2009 தொடக்கம் 15.05.2017 வரையான காலப்பகுதியில் 1087 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக றைஸ் ஸ்ரீலங்கா ஆய்வு மேம்பாட்டுக்கான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிறுவனம் 2010ம் ஆண்டு தொடக்கம் 2016/2017ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம் பெற்ற மரணங்கள் அவற்றுக்கான காரணங்கள் மற்றும் இப்பிரதேசத்தில் ஆயுள் எதிர்பார்க்கை தொடர்பாக முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை கடந்த திங்கட்கிழமை இந்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டன.
றைஸ் ஸ்ரீலங்கா ஆய்வு மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், நகர சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.றிபாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் 13.11.2009 தொடக்கம் 15.05.2017 வரையான காலப்பகுதியில் 1087 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக இதன் போது குறிப்பிட்ட அவர், இவற்றில் ஆண்களின் மரண வீதம் பெண்களை விட அதிகமாகும் எனக் குறிப்பிட்டார்.
2016 காலப்பகுதியில் மிக அதிகமான மரணங்களும் 2009ல் குறைந்தளவான மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இவ் ஆய்வின் போது அதிகமான மரணங்கள் ஆஸ்மா, பக்கவாதம், புற்றுநோய், இதய நோய், மற்றும் குருதி அழுத்தம், தொற்று நோய், தற்கொலை, கொலரா போன்றவையினால் ஏற்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மிக அதிகமான மரணம் 40-89 வயதுப் பிரிவில் நிகழ்ந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. மிக அதிகமான மரணங்கள் காத்தான்குடி -06 பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் மிகக்குறைவான மரணங்கள் காத்தான்குடி -05 பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி நிருபர்
No comments:
Post a Comment