வயது போன பின்னர் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கத் தவறுவதால் பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகுவதை நாம் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது பெற்றோரை கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதை பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதில் பல பிள்ளைகள் தமது பெற்றோரை கவனித்தே வருகின்றார்கள். தமது பெற்றோரை அன்றாடம் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று கவனிப்பது சில பிள்ளைகள் தம்மோடு பெற்றாரை வைத்திருப்பது இன்னும் சில பிள்ளைகள் தமது பெற்றோருக்கு தனி இடம் வாங்கிக் கொடுத்து வைத்து பராமரிப்பது போன்ற நற்காரியங்களையும் செய்தே வருகின்றனர்.
சில பிள்ளைகள் பெற்றோரை தினமும் சென்று பார்வையிட்டு அவர்களின் நலன்களை அக்கறையுடன் கவனித்து வருகின்றனர். சில பிள்ளைகள் தினமும் தமது பெற்றோரை பார்க்காவிட்டால் அவர்களுக்கு தூக்கமே வராது.
இந்த நிலையில் இன்னும் சில பிள்ளைகள் தமது பெற்றோரை கவனிப்பதே கிடையாது. பெற்றோர் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கண்டு கொள்வதே இல்லை. பெற்றோர்கள் விடயத்தில் ஏனோ தானோ என்றும் நடந்து கொள்கின்ற பிள்ளைகளையும் நாம் பார்க்கின்றோம்.
வருடத்தில் ஒரு தரம் பெருநாள் தினத்தில் மாத்திரம் தமது பெற்றோரை பார்க்கும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்னும் சில பிள்ளைகள் தனது தகப்பனை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வந்து தகப்பனை பார்க்கச் செல்வதே இல்லை. ஆனால் தகப்பன் மரணித்தவுடன் ஜனாஸாவை அடக்கம் செய்ய வீட்டுக்கு கொண்டு செல்லப் போகின்றேன் தாருங்கள் என கேட்டுச் செல்வார்கள்
சில பிள்ளைகள் தமது பெற்றோரை தெரு தெருவாக பிச்சை எடுக்கவும் வைத்துள்ள ஒரு பரிதாபகரமான நிலையையும் நாங்கள் பார்க்கின்றோம்.
தமது பெற்றோரை பராமரிக்க வசதியிருந்தும் பிள்ளைகள் அவர்களை பராமரிக்க தவறி விடுவதுடன் அவர்களை திரும்பிக் கூட பார்க்காத நிலையையும் சமூகத்தில் காண்கிறோம்.
தனது பிள்ளைகள் தன்னை பார்க்க வரமாட்டார்களா? என ஏங்கித்தவிக்கும் தாய் மற்றும் தந்தை பிள்ளைக்கு ஏதும் நடந்து விட்டால் துடியாய் துடித்து விடுகின்றனர்.
கடந்த 02.02.2019 சனிக்கிழமையன்று காத்தான்குடிக் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு 75 வயது தாயின் பரிதாபகரமான மரணம் இதற்கு ஒரு சான்றாகவே இருக்கின்றது.
சொந்தப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டிப்பிள்ளைகள் என தன்னைச் சார்ந்து இவர்கள் அனைவரும் இருக்கத்தக்கதாக ஏன் இந்த தாய் கடலில் விழுந்து தனது உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என ஆராய்கின்ற போது தன்னை பராமரிக்க யாரும் முன் வராததால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் கடலில் விழுந்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் என்றே அறிய முடிகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு சகோதரர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஒரு தாய் வீடு வீடாக தெரு தெருவாக பிச்சை எடுத்து திரிகின்றார்.
இந்த தாய்க்கு மூன்று ஆண் பிள்ளைகள். வசதியாக இருக்கின்றார்கள் பெண் பிள்ளையும் இருக்கின்றார் ஏன் இந்த தாயை பிச்சை எடுக்க வைத்துள்ளார்கள் எனக் கூறியதுடன் அவர்களிடம் இதை நீங்கள் எத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சில சகோதரர்கள் கவனிப்பதற்கு பெற்றோர் இல்லையே என்று ஏங்கி தவித்து கவலைப்படுகின்ற நிலையையும் அவதானிக்கின்றோம். தாம் வளர்ந்து உழைக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர் இல்லாமல் போய் விட்டார்களே சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டோமே என்று கதறி அழுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே தான் பெற்றோரை பராமரிப்பது அவர்களின் நலனில் அக்கறை கொள்வது அவர்களை முழுமையாக கவனிப்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் கடமையும் பொறுப்புமாகும்.
இதற்கு அல்லாஹ்விடம் கூலியும் உண்டு. கவனிக்கத்தவறும் பிள்ளைகள் மீது அல்லாஹ்வின் தண்டனையுமுள்ளது.
தான் ஒரு பெற்றோராக மாறும் போது தன்னையும் தனது பிள்ளைகள் கவனிக்கா விட்டால் இந்த நிலையே தனக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு பிள்ளையும் செயற்பட வேண்டும்.
நம்மை பெற்றெடுத்து நமது இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நம்மை வளர்த்தெடுத்த நமக்காக வாழும் நமது பெற்றோரை கவனிப்போமாக அவர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அவர்களை பராமரிப்போமாக
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
09.02.2019
No comments:
Post a Comment