(நா.தனுஜா)
மாகாண சபை முறைமையை முற்றாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதற்கு இடமளிக்காமல் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தினர்.
அதுமாத்திரமன்றி தற்போது இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பான தனிநபர் பிரேரணையானது ஏற்கனவே 2023 இல் தேசிய மக்கள் சக்தி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட அதே தனிநபர் பிரேரணைதான் எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஆகவே சாணக்கியனின் தனிநபர் பிரேரணை குறித்து ஆராய வேண்டும் என காலத்தை இழுத்தடிக்காமல் அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் 2017 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை 3 வருடங்களுக்கு பிற்போட்டிருக்கும் நிலையில், சுமார் 6 வருடங்களாக இயங்காமல் இருக்கும் மாகாண சபைகளை அரசியலமைப்பின் பிரகாரம் இயங்கச் செய்வதற்கு ஏற்றவாறு மாகாண சபைத் தேர்தல்களையேனும் உடனடியாக நடத்த வேண்டுமமென வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் சிறியதொரு திருத்தத்தையே மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதனை காரணங்காட்டி தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று மாகாண சபைத் தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும், இருப்பினும் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் அதனையே தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்ததாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
2023 இல் சமர்ப்பித்த மாகாண சபைத்தேர்தல் சட்டத்திருத்தம் குறித்த தனிநபர் பிரேரணை முதலாம் வாசிப்பைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. அதனையடுத்து உயர் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அப்பிரேரணை தேசிய மக்கள் சக்தி உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் மூன்றாம் வாசிப்பு நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டதன் விளைவாகவே அப்போதும் அப்பிரேரணையை நிறைவேற்ற முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் அந்தப் பிரேரணையே தற்போது இரா. சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அது குறித்து மீண்டும் புதிதாக ஆராய வேண்டிய அவசியமில்லை. மாறாக அதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், மாகாண சபைகள் இயங்கினால்தான் அவை செயற்திறன்மிக்கவை என்றோ அல்லது அவற்றால் எந்தவொரு பயனும் இல்லை என்றோ எதேனுமொரு தீர்மானத்துக்கு வரமுடியும் எனவும், ஆகையினால் இனினும் தாமதமின்றி மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், நடைமுறையில் அவை முழுமையாக வழங்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், மாகாண சபைகளை இயங்கச் செய்வதன் ஊடாகவே அவற்றின் இயலுமையை மதிப்பிட முடியும் என்றார்.
மேலும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமோ அல்லது அதனூடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளோ தமிழர்களுக்கான முழுமையான அரசியல் தீர்வு அல்ல என்பதே சகல தமிழ்த் தேசிய கட்சிகளினதும் பொதுவான நிலைப்பாடு எனச் சுட்டிக்காட்டிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இருப்பினும் அதனை கைவிடுவது தற்போதுள்ள அற்பசொற்ப அதிகாரப்பரவலாக்கத்தையும் இல்லாமல் செய்துவிடும் என்று எச்சரித்தார்.
அவ்வாறு மாகாண சபைகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகவும், எனவே அதற்கு இடமளிக்காமல் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment