சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து பரிதவிக்கும் அப்பாவி மக்களுக்கே சுனாமி வீடுகள் வழங்க வேண்டும். எவ்வித காரணம் கொண்டும் சுனாமியால் பாதிக்கப்படாத எவருக்கும் வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அவர்களுக்கு வீடு வழங்குவதும் அநியாயமான முடிவென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார். இதனையடுத்து காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்று பெரும் அமளிதுமளியும் இடம்பெற்றது.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை (25.06.2018) அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தின்போதே இடம்பெற்றது.
மாவட்ட இணைப்புக்குழுத் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இணைத்தலைவர்களான அமைச்சர் தயா கமகே, முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் உட்பட பிரதி அமைச்சர் அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, அம்பாறை அரசாங்க அதிபர் துசித பி.வணிகசிங்க, மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அரச திணைக்கள கூட்டுத்தாபனத் தலைவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2004இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கென, சவுதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கபட்ட வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டபோதே இவ்வாறான அமளி துமளி நிகழ்வு ஏற்பட்டது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இணைப்புக்குழுத் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி., சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென சவுதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளை தற்போது விகிதாசார முறைப்படி 76 வீதமாக பெரும்பான்மையினருக்கும் வழங்குமாறு கூறுவது நல்லாட்சியைக் கேலிக் கூத்தாக்கும் செயல் என கூறினார்.
இவ்வேளையில் குறிக்கீடு செய்த பிரதி அமைச்சர் சிறியானி விஜயவிக்ரம, நீதிமன்றத் தீர்ப்பும் அவ்வாறே உள்ளதால் அதன்படியே செயற்படுத்துமாறும் அமைச்சரவையிலும் இதே முறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளபடியால் செயற்படுத்துமாறும் கூறியதையடுத்து, இதன்போது குறுக்கிட்ட சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.நௌசாத், பௌத்த, இந்து மக்களுக்கென சவுதி அரசு இந்த வீடுகளை நிர்மாணிக்கவில்லை.
விகிதாசார முறைப்படி சுனாமி யாரையும் தாக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களைக் கருத்திற்கொண்டே நிர்மாணிக்கப்பட்டது. அக்கரைப்பற்று பகுதியில் பாதிக்கபட்ட கணிசமானோர் முஸ்லிம்களே. எனவே மனிதாபிமான அடிப்படையில் தெரிவு இடம்பெற்று வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடந்து சபையில் பலத்த சலசலப்பு ஏற்பட்டதுடன் எவருடைய பேச்சையும் எவரும் கேட்க முடியாதவாறு சபை குழப்ப நிலையை அடைந்தது.
இதனையடுத்து குறுக்கிட்ட பிரதி அமைச்சர் சிறியானி, இவ்வாரம் ஜனாதிபதி சவுதிக்கு செல்ல உள்ளதால் இவ்வீடுகளின் நிலைமை என்னவென்று அங்கு ஜனாதிபதியிடம் வினவினால் எமது ஜனாதிபதி என்ன பதிலளிப்பார். எனவே நீதிமன்றத் தீர்ப்பையே செயற்படுத்துமாறும் தொடர்ந்தும் வலியுறுத்தினார். இதற்கு கருத்துத் தெரிவித்த மன்சூர் எம்.பி., ஜனாதிபதி சவுதிக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக பாதிக்கப்படாதவர்களுக்கு வீடுகள் வழங்க முடியாது என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து முன்னாள் எம்.பி. சந்திரதாச கலப்பத்தி நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியில்லை எனின் மேன்முறையீடு செய்து பொருத்தமான தீர்வைப் பெறுவதே சாத்தியமானது என்றார்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் வீடுகளை வழங்குவதே நியாயமானது. நாம் சாதி பேதங்களை மறந்து செயற்படுவோம். மூவினங்களும் இந்நாட்டுப் பிரஜைகள் என்று தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அகமட் சக்கி:-பாதிக்கப்பட்டவர்கள் எனது பிரதேச மக்களே. அவர்கள் இன்னும் ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகள் வழங்க நாம் ஒருபோதும் பின் நிற்கமாட்டோம். சுனாமியால் பாதிப்புறாத எவருக்கும் வீடுகள் வழங்குவதை அனுமதிக்க முடியாது எனவும் உரத்த தொனியில் தெரிவித்ததைக் காண முடிந்தது.
விமலவீர திசாநாயக எம்.பி.:- நீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்குவோம் அல்லது மேன்முறையீடு செய்து தீர்ப்பொன்றைப் பெறுவோம் என்றார். இதனையடுத்து மன்சூர் எம்.பி. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டவை சுனாமியால் பாதிப்புற்றவர்களுக்கே. விகிதாசார முறையைக் கையாண்டு நல்லாட்சியை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் ஆக்ரோஷமாகத் தெரிவித்ததுடன் ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்கமான முடிவொன்றைப் பெறுவதாகவும் சபையில் முடிவெடுக்கப்பட்டது.
Vidivelli
No comments:
Post a Comment