நூருல் ஹுதா உமர்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டமானது முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும். உலகில் பல நாடுகளில் இவ்வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இவ்வாறான வேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தியிலும் பெரிய மாற்றங்களை அடைந்துள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான நல்ல எண்ணத்துடன் இங்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டால் அவ்வேலைத்திட்டம் சிறப்பாக வளர்ச்சியடைந்து நாட்டுக்கு நன்மை சேர்க்க நாம் பிராத்திக்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் 2 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இத்திட்டம் தொடர்பில் பிரதமர் சபையில் தெளிவுபடுத்தியிருந்தாலும் இன்னும் இத்திட்டமானது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவாக சென்றடையவில்லை. அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறும், இவ் வேலைத்திட்டத்தை தாம் வரவேற்பதோடு, முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவும் இருகின்றேன்.
குறிப்பாக சிங்கப்பூர், ஏனைய நாடுகள் இத்திட்டத்தின் ஊடாக எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்று பார்க்கும்போது இத்திட்டமானது உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்தாக அறியக்கிடைக்கிறது. எனவே நாம் உள்ளூராட்சி மன்றங்களை இத்திட்டத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
அதற்கான ஆளனி, இயந்திர வசதிகள் எம்மிடம் இருக்கிறது. அவர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் துப்பரவு பணிகளை மேற்கொள்ளல், வடிகான் துப்பரவு மரங்களை நடுதல், கிராமங்களை அழகு படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளலாம்.
அதேபோல், தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க சமுத்திரம் திறந்திருப்பதால் அதிகமான வயல் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெட்டுவதற்கு ஆயத்தமான நிலையில் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment