(எம்.மனோசித்ரா)
பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் சுகாதார துவாய்களை (sanitary napkins) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் புதிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக் கொள்வதில் சவால்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு ஏப்ரல் புத்தாண்டைத் தொடர்ந்து அவற்றை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வறுமை உள்ள பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான வவுச்சர்களை அரசாங்கத்தின் ஊடாக வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
1200 ரூபாய் பெறுமதியுடைய வவுச்சர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப்பத்திரம் ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்களை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு ஆதரவை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.
No comments:
Post a Comment