பட்டியல் சாதி மாணவணை சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் : படுகாயம் அடைந்தவர் சொல்வது என்ன? - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, August 11, 2023

demo-image

பட்டியல் சாதி மாணவணை சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் : படுகாயம் அடைந்தவர் சொல்வது என்ன?

cd02b440-3836-11ee-bde6-7ffba94c56ae
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு சிறார்களை சிறார் நீதி வாரியத்தில் திருநெல்வேலி மாவட்ட போலீசார் ஒப்படைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரி, பாதிக்கப்பட்ட மாணவர் வேறு பாடசாலையில் சேர விரும்பினால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வீடு புகுந்து வெட்டிய சக வகுப்பு மாணவர்கள்
திருநெல்வேளி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வள்ளியூரில் உள்ள பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு, அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பாடசாலையில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் பிரபுவின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த பிரபுவின் தங்கை, அதைத் தடுக்க முயன்றுள்ளார். இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த ஆதிக்க சாதி மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வெட்டுக் காயங்களுடன் இருந்த இருவரையும், அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்த பிறகு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பாடசாலையிலேயே தொடங்கிய சாதிய வன்கொடுமை
ஜூலை மாதம் இறுதியில் இருந்து பிரபு பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலும், பிறகு காட்டிலும் கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

“நான் இதைப் பார்த்து, அவனை பாடசாலை போகச் சொல்லி சத்தம் போட்டேன். அவன், முதலில் எதுவும் சொல்லவில்லை. ரொம்ப அழுத்திக் கேட்ட பிறகு அழுது கொண்டே, தன்னை தினமும் பாடசாலையில் ஆதிக்க சாதி மாணவர்கள் இழிவாகப் பேசுவதாகவும், தான் கொண்டுபோகும் பொருட்களை பிடுங்கிக் கொள்வதாகவும் கூறினான்.

‘உங்க அம்மா எங்க வீடுகள்ல வேலை செஞ்சுதானே உன்னை படிக்க வைக்கிறா, அப்போ நீ எங்களுக்கு வேலை செஞ்சா என்ன ஆகிடும்’ என்றெல்லாம் ஆதிக்க சாதி மாணவர்கள் கேட்டதாகக் கூறினான்," என்று கூறுகிறார் அம்பேத்கர் தொடக்கப் பாடசாலையில் சத்துணவுப் பணியாளராக உள்ள பிரபுவின் தாய்.

அதைக் கேட்டுத் தானும் செய்வதறியாது விட்டுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். பின்னர் மகன் படிக்கும் பாடசாலையில் இருந்தே பாடசாலைக்கு வராதது குறித்து கேட்டு அழைத்துள்ளனர்.

"ஆகஸ்ட் 9 ஆம் தேதி நானும் என் மகனை அழைத்துக் கொண்டு, பாடசாலைக்குச் சென்று பாடசாலை தலைமையாசிரியரிடம் நடந்ததையெல்லாம் கூறினோம். அவர்களும் அந்த மாணவர்களை அழைத்து எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கி வைத்துவிட்டு, அனுப்பி விட்டனர்,” என நடந்தது குறித்து பிரபுவின் தாய் விவரித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்ததை விவரித்த அவர், அன்று மாலையே பிரபுவை ஆதிக்க சாதி மாணவர்கள் மிரட்டியதாகக் கூறினார்.

“அந்த கடிதம் எழுதி வாங்கியதில்தான் அவர்களுக்கு ஏதோ பிரச்சினைபோல. எங்களைப் பற்றியே நீ புகார் கொடுக்கிறாயா, உன்னை என்ன செய்கிறோம் பார் என அன்றைக்கு மாலையே மிரட்டியுள்ளனர்.

ஆனால், நாங்களும் இப்படி வீட்டிற்கு வந்து வெட்டும் அளவுக்குப் பெரிய பிரச்சினை ஆகும் என்று நினைக்கவில்லை,” என்றார் பிரபுவின் அம்மா.

பாதிக்கப்பட்ட மாணவர் என்ன சொல்கிறார்?
வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் தெரிவிக்கையில், தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், தனது பணத்தையும் ஆதிக்க சாதி மாணவர்கள் பிடுங்கிக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

“நான் பாடசாலைக்குச் செல்லும்போதெல்லாம் என்னிடம் இருக்கும் பணத்தை பிடிங்கிக் கொண்டு அனுப்பி விடுவார்கள். காசில்லாமல் நான் இருக்கும்போது, கடைக்கு அனுப்பி, மிட்டாய், சிகரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரச் சொல்வார்கள்.

தேர்வின்போது அவர்கள் என்னைப் பார்த்து எழுதுவதற்காக விடைத்தாளை காண்பிக்கச் சொல்வார்கள். நான் ஆசிரியர்களுக்குப் பயந்து காண்பிக்காவிட்டால், வெளியே வந்து என்னை அடிப்பார்கள்,” என்கிறார் பிரபு.

அவர்களின் துன்புறுத்தல் எல்லை மீறிச் சென்றதால்தான் அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை என்றும் கூறினார். மேலும், “இவர்கள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் நான் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்தேன். நான் எதற்கு பயந்தேனோ அது இப்போது நடந்துவிட்டது,” என்று கூறினார்.

பாடசாலைகளில் தொடரும் தீண்டாமை
நாங்குநேரியில் படித்தால், அங்குள்ள ஆதிக்க சாதியினரின் இடையூறு இருக்கும் என்றுதான் பக்கத்து ஊருக்கு தன் குழந்தைகளைப் படிக்க அனுப்பியதாகச் சொல்கிறார் பிரபுவின் தாய்.

“நாங்குநேரியில் உள்ள பாடசாலையிலேயே 12ஆம் வகுப்பு வரை உள்ளது. ஆனால், இங்கு இருந்தால், நாங்கள் இன்னார்தான், இந்தத் தெருவில் இருந்துதான் வருகிறோம் என்று தெரிந்து கொண்டு, எங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவர். அதனால்தான் நான் பக்கத்து ஊருக்கு என் குழந்தைகளைப் படிக்க அனுப்பினேன்,” என்றார்.

இதற்கு முன் ஒரு முறையேனும் சொந்த கிராமத்தில் உள்ள பாடசாலையில் தன் குழந்தையைச் சேர்த்துள்ளாரா எனக் கேட்டபோது, “அதெல்லாம் முன்னாடி இங்க இருக்கின்ற பாடசாலையில்தான் சேர்த்தேன். நாங்கள் யார், எந்த தெரு உள்ளிட்ட தகவல்களை வைத்துக் கொண்டு என் குழந்தைகளை துன்புறுத்தினர் என்பது அங்கு சேர்த்த பிறகுதானே தெரிந்தது. என் மகள் இந்தப் பாடசாலைக்கே செல்ல மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

அதற்குப் பிறகுதான் வள்ளியூரில் இருக்கும் பாடசாலையில் சேர்த்தேன். இப்போது, இந்த ஊர் ஆதிக்க சாதிப் பசங்க அங்கேயும் சென்றுவிட்டதால்தான், இப்போது இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

அதையே உறுதிப்படுத்துகிறார் அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் தளவாய்மணி.

“இவர்களுக்கு மட்டும் இல்லை. இந்த நாங்குநேரில் உள்ள பெருத்தெருவில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட பட்டியல் சாதி குடும்பத்தினருக்கும் இதே நிலைதான்.

நாங்கள் இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டுதான் இங்கு வாழ்கிறோம். ஆதிக்க சாதியினர் தொடர்ந்து எங்களை துன்புறுத்துவதாலும், எங்கள் குழந்தைகளை பாடசாலையில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்குவதாலும், நாங்கள் அருகில் உள்ள வள்ளியூர், களக்காடு, காரங்காடு, இளங்குளம் பகுதிகளில் உள்ள பாடசாலைக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம். ஆனால், இப்போது அங்கும் படிக்க முடியாத சூழலை ஆதிக்க சாதியினர் உருவாக்கி வருகின்றனர்,” என்றார்.

ஆதிக்க சாதியினர் வன்முறையை கையில் எடுப்பது ஏன்?
பாடசாலைகளில் சாதிப் பிரச்சினை குறித்து பேசிய கற்க கசடற நூல் ஆசிரியரும் எழுத்தாளருமான பாரதி தம்பி, அன்றாடம் நடக்கும் சாதிப் பிரச்சினைகளை இயல்பாகக் கடந்து செல்வதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்.

“அன்றாடம் நடக்கும் சாதியக் கொடுமைகளையும், தீண்டாமைகளையும் நாம் இயல்பான ஒன்றாகக் கருதி, அதை இயல்பாக்கி, கடந்து செல்வதாலேயே, இதுபோன்ற பெரிய அசம்பாவிதங்கள் நடக்கின்றன. மாறாக, பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கான காரணங்களாக இருக்கும் அந்தத் தருணங்களிலேயே சரி செய்ய வேண்டும். அப்போது, இது போன்ற சம்பவம் நடத்திருக்காது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாடசாலைகளில் சாதி என்பதைவிட, மக்கள் வாழும் ஊர் தெருக்களில் சாதி இருக்கின்றது. அங்கிருந்து வரும் மக்கள்தான் பாடசாலையிலும் இருக்கிறார்கள். அதனால், ஒட்டு மொத்தமாக சமூக மாற்றம் நடந்தால் மட்டுமே பாடசாலைகளிலும் சாதியை ஒழிக்க முடியும்,” என்றார்.

மேலும், அவர், “மனிதர்கள் இரட்டை நிலைப்பாட்டுடனே வாழ்கின்றனர். அந்த இரட்டை நிலைப்பாடு ஆரம்பிக்கும் இடம் பாடசாலைதான். பாடசாலையில் ஓர் ஆதிக்க சாதி மாணவரும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவரும் ஒன்றாகப் பழக முடிகிறது, நண்பனாகப் பார்க்க முடிகிறது. அவர்கள் இருவரும் பாடசாலையை விட்டு வெளியே சென்று, அவர்களின் கிராமத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் அதே நண்பர்களாக இருக்க முடிவதில்லை. இந்த இரட்டை நிலைப்பாடுதான், அவர்கள் வளர்ந்த பிறகும் தொடர்கிறது,” என்றார்.

பட்டியல் சாதியினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்துப் பேசிய பாரதி தம்பி, கிராமங்களில் தற்போது சாதிய படிநிலைகளாக கருத்தப்படும் அனைத்தும் தகர்க்கப்படுவதால், ஆதிக்க சாதியினர் வன்முறையை கையிலேடுப்பதாகக் கூறினார்.

“ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், அவருக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுகிறார். அனைத்து வகையிலும் பட்டியல் சாதியினர் ஆதிக்க சாதியினருக்கு இணையாக வரும்போது, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஆதிக்க சாதியினர் கையில் எடுக்கும் ஆயுதம்தான் வன்முறை,” என்றார்.

ஆறு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
இந்தச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள் ஆறு பேரை சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட மாணவர், மாற்றுப் பாடசாலையில் சேர விரும்பினால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பாடசாலைகளில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தக்கோரி, தலைமை அதிகாரிகளுடன் நடக்கும் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம்,” என்றார்.

BBC

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *