(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நாளையதினம் அலரி மாளிகையில் கூடவுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்' என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நாளை காலை அலரி மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பிரதமரின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுகையில், ஜனாதிபதி விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து உறுதியான தீர்மானம் எட்டப்படும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தான் பதவி விலகலை மையப்படுத்தியதாக அமையாது. பதவி விலகலை தொடர்ந்து அடுத்தகட்டமாக முன்வைத்துள்ள யோசனைகள் நடைமுறைக்கு பொறுத்தமாக அமையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்தாக அமையும்.
பிரதமர் பதவியில் இருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் முக்கிய தரப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார். சகல தரப்பினரது கருத்துக்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment