மின் கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் - சர்வதேச நாணய நிதியம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 13, 2025

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் - சர்வதேச நாணய நிதியம்

(நா.தனுஜா)

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், கடினமான மறுசீரமைப்புக்களின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளை நிலையாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது 'இலங்கையை பொறுத்தமட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டம் நிதியியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதனால் அதுவே இலங்கை நாடும் இறுதிச்செயற்திட்டம்' என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருப்பது பற்றி சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்த நான்காம் கட்ட மீளாய்வு தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அந்த அறிவிப்பு 15 சதவீத மின் கட்டண உயர்வு மற்றும் மொத்த விநியோக கொடுக்கல், வாங்கல்களுக்கான கணக்கு வழிகாட்டல்களை வெளியிடல் என்பவற்றை உள்ளடக்கியிருக்கின்றது.

அதன்படி ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட மீளாய்வு முடிவடைந்து, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர் இலங்கைக்கு 334 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆட்சியியல் மறுசீரமைப்புக்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட செயற்திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது. அச்செயற்திட்டத்தில் பொது கொள்வனவுச் சட்டம், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம் மற்றும் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவான நடவடிக்கைகள் என்பன உள்வாங்கப்பட்டிருந்தன.

அதேபோன்று விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் ஆதரவுடன் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க பெறுபேறுகளைத் தந்திருக்கின்றன. அதற்கமைய நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு விரிவாக்கத்தை பதிவு செய்திருக்கின்றது.

பொருளாதாரத்தின் சகல துறைகளும் விரிவடைவதற்கான குறிகாட்டிகள் தென்படுகின்றன. பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. வெளிநாட்டுக் கையிருப்பு உயர்வடைந்திருக்கின்றது. வருமானத்திரட்சி மற்றும் நிதியியல் நிலை என்பன முன்னேற்றமடைந்திருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அடைவுகளை நிலையாகத் தக்க வைத்துக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தை முழுமையான நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment