(எம்.மனோசித்ரா)
மத்திய மருந்து சேமிப்பு கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மருத்துவமனை கட்டமைப்பிற்குள்ளும் சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய மருந்து சேமிப்பு கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாகவுள்ளது. மருத்துவமனை கட்டமைப்பிற்குள்ளும் சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
குறிப்பாக வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமைகளுக்கான மருந்துகள் இந்த பற்றாக்குறை பட்டியலில் உள்ளடங்குகிறது.
புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. இது பல நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அணுகலையும் கட்டுப்படுத்தியுள்ளது.
அத்தகைய மருந்துகளை தனிப்பட்ட முறையில் வாங்குவது பெரும்பாலும் கட்டுப்படியாகாது. இந்த நெருக்கடி பாதிக்கப்பட்டவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கிறது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தவறியமையினாலேயே இந்த பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாமலுள்ளது.
2024ஆம் ஆண்டு கொள்முதல் தாமதங்கள்தான் இதற்கு காரணம் என்று சுகாதார அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே இந்த பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சரும், ஜனாதிபதியும் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இந்தப் பிரச்சினை ஏன் முன்னரே கண்டறியப்படவில்லை?
தற்போதைய மருந்து பற்றாக்குறைகள் அவசரகால கொள்முதல் நடைமுறைகளை நம்பியிருப்பதற்கு வழிவகுக்கும். இது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளை எழுப்புகிறது.
அந்த வகையில் இது அவசரகால கொள்முதல் நாடகத்திற்கு தெளிவாக வழிவகுக்கிறது. மருந்துகள் கிடைக்கவில்லை மற்றும் முற்பதிவுகள் தாமதமானால், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சுகாதார அமைச்சிற்கு அவசரகால கொள்முதல்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றார்.
No comments:
Post a Comment