மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் 2 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதனும், பிரதி முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த வைரத்து தினேஸ்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (11) காலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.
இதன்போது முதல்வரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியைச் சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய, வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பிரதி முதல்வருக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டபோது மாநகர சபை உறுப்பினர் வை.தினேஸை பிரதி முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் து.மதன் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் மீரா சாஹிபு ஆயிசா உம்மா வழிமொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்னுமொரு தெரிவாக முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலனை சுயேட்சைக் குழு உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் முன்மொழிய வி.சசிகலா வழிமொழிந்தார்.
அதன் பிரகாரம் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் வாக்கெடுப்பு இரகசிய முறையிலா, பகிரங்க முறையிலா என்பதற்கான உறுப்பினர்களின் விருப்பு கோரப்பட்டது.
அதன் பிரகாரம், 22 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு விருப்பு தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் பிரதி முதல்வருக்கான வாக்கெடுப்பு பகிரங்க முறையில் நடத்தப்பட்டது.
அந்த வகையில் வை.தினேஸுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், க.சத்தியசீலனுக்கு ஆதரவாக 4 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.
அதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 12 பேர் நடுநிலைமை வகித்தனர்.
அதன்படி மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதி முதல்வராக வை.தினேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
34 ஆசனங்களை கொண்ட மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களை வென்றது.
தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், சுயேச்சைக்குழு 4 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் கைப்பற்றின.
மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து 18 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது.
இன்றைய அமர்வுக்கு பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகைதந்திருந்ததை காணமுடிந்தது.
சபை அமர்வினை தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்து தெரிவித்ததை காணமுடிந்தது.
No comments:
Post a Comment