(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். இந்த காலப்பகுதியில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் ஒரு சில செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமத்ரி தர்ம மகா சங்க சபையின் நாயக்கர் பேராசிரியர் கொடபிடியே ராஹூல தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாரம்பரியமான அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த நிலையில்தான் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள்.
குறுகிய காலத்துக்குள் மக்களின் எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மக்களின் எதிர்பார்ப்பு, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
சட்டத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
பரிசோதனைகள் ஏதுமின்றி 300 இற்கும் அதிகமான கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் இந்தியாவுடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அரசியல் நோக்கங்களுக்காக நாங்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டவில்லை. மக்கள் மத்தியில் உள்ள கேள்விகளுக்கு பதில் கோருகிறோம்.
மக்களாணைக்கு அமைவாக அரச தலைவர்கள் நாட்டை நிர்வகிக்க வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு. எமக்கான பணிகள் மற்றும் கடமைகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றார்.
No comments:
Post a Comment