தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதைக்குட்படுத்திய சம்பவமொன்று ஹட்டன், குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் அக்காவான 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பலமுறை தாக்கியதாகவும், சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்ததுடன், மனைவியைத் தாக்கியதில் அவரின் கை முறிந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதற்காகவே இவ்வாறு தண்டனை வழங்கியதாக அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகள் அழுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் அயலவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment